இந்தியா

பாலியல் வன்கொடுமை குற்றத்தை மறைக்க லஞ்சம் : பெண் போலீஸ் கைது..!

பாலியல் வன்கொடுமை குற்றத்தை மறைக்க லஞ்சம் : பெண் போலீஸ் கைது..!

webteam

குஜராத்தில் பாலியல் வன்கொடுமை குற்றத்தை மறைத்து சாதாரண பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த பெண் போலீஸ் எஸ்.ஐ கைது செய்யப்பட்டார்.

குஜராத் மாநிலம் மேற்கு அகமதாபாத் பகுதியில் உள்ள மகளிர் காவல்நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக இருந்தவர் ஸ்வேதா ஜடேஜா. கடந்த வருடம் கேனல் ஷா என்பவர் தங்களை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக 2 பெண்கள் ஸ்வேதாவிடம் புகார் அளித்துள்ளனர். அப்பெண்கள் பணிபுரிந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான கேனல் ஷாவை பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யாத ஸ்வேதா, சாதாரண குற்றத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

இதற்காக கேனல் ஷாவின் சகோதரரின் மூலம் ரூ.20 லட்சம் லஞ்சமாக பெற்றுள்ளார். மேலும் ரூ.15 லட்சம் லஞ்சம் தர வேண்டும் என தெரிவித்துள்ளார். ஆனால் அந்த தொகை கேனால் ஷாவின் தரப்பிலிருந்து இன்னும் வழங்கப்படாததால் அவர்களை ஸ்வேதா தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் தெரியவர, ஸ்வேதாவை கைது செய்தனர். அத்துடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஸ்வேதாவை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் அவர் விசாரித்த பாலியல் வன்கொடுமை வழக்கை மீண்டும் விசாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.