Delhi police
Delhi police File Image
இந்தியா

2006இல் 15 வயதில் கடத்தப்பட்ட பெண் 17 ஆண்டுகளுக்கு பின் மீட்பு - டெல்லியில் பரபரப்பு சம்பவம்!

Justindurai S

கடந்த 2006ஆம் ஆண்டில் கடத்தப்பட்ட 32 வயதான பெண்ணை 17 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடித்திருக்கின்றனர் டெல்லி போலீசார்.

பெண்கள் மாயமாவது என்ற பிரச்னையானது இந்தியாவில் பூதாகரமான பிரச்னையாக உருவாறி வருகிறது. சமீபத்தில் வெளியான தேசிய குற்ற ஆவண காப்பகத்தில் அறிக்கையானது சற்றே கவலை அளிக்கும் வகையில் பெண்களின் பாதுகாப்பு குறித்த மிகப்பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது. குஜராத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் மாயமாகியுள்ளனர் என்ற தகவல் நாடு முழுவதும் விவாதப் பொருளானது. குஜராத்தை தாண்டியும் பல்வேறு மாநிலங்களில் இதேநிலைதான் உள்ளது. பாலியல் தொழில், யாசகம் கேட்க வைத்தல், கடத்தல் தொழிலில் ஈடுபட வைத்தல் போன்ற பல்வேறு விஷயங்களுக்காக பெண்கள் கடத்தப்படுவதாகவும் அந்த அறிக்கை சொல்லியிருந்தது. இப்படியான ஒரு சம்பவம் டெல்லியில் நிகழ்ந்து அதனை அம்மாநில அரசு கண்டுபிடித்துள்ளது.

2006ல் மாயமான பெண்கள்.. 17 வருடங்களுக்கு பிறகு மீட்பு

2006ஆம் ஆண்டில் டெல்லி கோகல்புரியில் உள்ள தனது வீட்டிலிருந்து பெண் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட பிறகு அந்த பெண், உத்தரப் பிரதேசம் மாநிலம் பாலியா மாவட்டத்தில் உள்ள செர்டிஹ் கிராமத்தில் தீபக் என்பவருடன் வசித்து வந்துள்ளார். இதனிடையே கொரோனா ஊரடங்கின் போது தீபக் உடன் ஏற்பட்ட தகராறு காரணமாக வீட்டை விட்டு வெளியேறிய அப்பெண், டெல்லியியில் வாடகை வீட்டில் தங்கி வந்துள்ளார்.

டெல்லி காவல்துறை சொல்வதென்ன?

இதனையடுத்து, மே 22-ஆம் தேதி டெல்லி சீமாபுரி காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், அந்த பெண் தங்கியிருந்த வீட்டிற்கு சென்று அவரை மீட்டனர்.

இந்த ஆண்டில் மட்டும் இதுவரை டெல்லியில் கடத்தப்பட்ட 116 பேர் மற்றும் காணாமல் போன 301 பேர் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை துணை ஆணையர் ஷஹ்தரா ரோஹித் மீனா தெரிவித்துள்ளார்.

கடத்தல் தொடர்பாக வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்

தேசிய குற்ற ஆவண காப்பத்தின் (NCRB) அறிக்கையின் படி இந்தியாவில் கடந்த 2021 ஆம் ஆண்டு மட்டும் 1,01,707 பேர் கடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது 2020 ஆம் ஆண்டில் இருந்ததை விட 19.9 சதவிதம் அதிகம். கடத்தப்பட்டவர்களில் 17,605 பெண்கள், 86,543 பெண்கள் அடங்குவர். ஒரு திருநங்கையும் கடத்தப்பட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது. உத்தரப்பிரதேசம், பிகர், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும் மேற்குவங்கம் மாநிலங்களில் கடத்தல் அதிக அளவில் உள்ளது.

ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 11 பேர் கடத்தப்படுகின்றனர். அதேபோல், இந்தியாவில் சராசரியாக நாள் ஒன்றிற்கு 82 பேர் கொலை செய்யப்படுகின்றனர். மொத்தமாக, 2021 ஆம் ஆண்டில் மட்டும் 29,272 பேர் கொல்லப்பட்டுள்ளனர்