இந்தியா

குழந்தை முன்பு 79 நாட்களாக பெண்ணை பூட்டிய அறையில் பாலியல் வன்கொடுமை செய்த மந்திரவாதி!

JustinDurai

குடும்பப் பிரச்சினையை தீர்த்து வைப்பதாக கூறி, மந்திரவாதி ஒருவர் தொடர்ந்து 79 நாட்களாக இரண்டரை வயது குழந்தையின் முன்பு  இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தம்பதி கடந்த 2017ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். திருமணமான சில மாதங்களிலேயே தம்பதிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. மேலும் மருமகளை, மாமியார் சித்ரவதை செய்து வந்ததாகவும் தெரிகிறது. இதனிடையே இருவருக்கும் ஆண் குழந்தை ஒன்று பிறந்து தற்போது இரண்டரை வயதாகிறது. இந்த நிலையில் தனது மருமகளுக்கு பித்து பிடித்துவிட்டதாக கூறி, அவரை மந்திரவாதி ஒருவரிடம் மாமியார் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது மருமகளை தன்னுடன் உடலுறவு வைத்துக் கொள்ள சம்மதம் தெரிவித்தால், தம்பதியரின் பிரச்னைக்கு தீர்வு கிடைத்துவிடும் என்று மந்திரவாதி  கூறியுள்ளார். இதற்கு ஒப்புக்கொண்ட மாமியார், தனது மருமகளை மந்திரவாதியுடன் உடலுறவு வைத்துக்கொள்ள கட்டாயப்படுத்தி உள்ளார்.  ஆனால் மருமகள் அதற்கு சம்மதிக்கவில்லை.

தொடர்ந்து அந்தப் பெண் மறுப்பு தெரிவிக்க, இரண்டரை வயது பேரனுடன் தனது மருமகளையும் மந்திரவாதியையும் ஒரு அறையில் வைத்து பூட்டிவிட்டு மாமியார் சென்றுவிட்டார். இதனை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட மந்திரவாதி, அந்தப் பெண்ணை 79 நாட்களாக அவரது குழந்தையின் முன்னிலையில் பாலியல் வன்கொடுமை செய்தார். 79 நாட்களுக்குப் பிறகு இந்த கொடுமை அந்த பெண்ணின் உறவினர்கள் மூலமாக போலீசாருக்கு தெரியவர, அவர்கள் கடந்த ஏப்ரல் 28ம் தேதி அடைத்து வைக்கப்பட்டிருந்த அந்த அறைக்கு சென்றனர். அங்கிருந்த அந்தப் பெண்ணையும் அவரது குழந்தையையும் மீட்டனர்.

மந்திரவாதியின் தொடர் சித்ரவதையால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு உடலில் காயங்கள் இருந்தன. மேலும் அந்தப் பெண்ணின் இரண்டரை வயது மகனையும் தாக்கியதால் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்தது. அதிர்ச்சியடைந்த போலீசார் அந்தப் பெண்ணையும், குழந்தையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து மந்திரவாதி, மாமியார், மாமனார் மைத்துனர் ஆகியோர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இச்சம்பவம் ஒடிசாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிக்கலாம்: ”என் தந்தையே என்னை பாலியல் வன்கொடுமை செய்கிறார்” - வீடியோ எடுத்து நியாயம் கேட்ட மகள்!