இந்தியா

பிறந்த நாளில் பாலியல் வன்கொடுமை செய்த நண்பர்கள்: இளம் பெண் உயிரிழப்பு!

webteam

பிறந்த நாள் பார்ட்டியில், தனது 4 நண்பர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

மகாராஷ்ட்ரா மாநிலம் அவுரங்காபாத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண், தனது நண்பர்கள் அழைப்பின் பேரில் ஜூலை மாதம் 7 ஆம் தேதி மும்பை செம்பூருக்கு சென்றிருந்தார். அன்று அவருக்கு பிறந்த நாள் என்பதால், கேக் வெட்டிக் கொண் டாடினர். பின்னர் அங்கிருந்த நான்கு நண்பர்களும் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர் அங்கிருந்து அவுரங்காபாத்துக்குத் திரும்பிய அந்தப் பெண், இதுபற்றி வீட்டில் யாரிடமும் சொல்லவில்லை. இந் நிலையில், அவரது அடிவயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருக்கலாம் என சந்தேகித்தனர். இதுபற்றி கேட்டபோது, உண்மையை ஒப்புக் கொண்ட அந்த இளம் பெண், நடந்த சம்பவத்தைத் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரது பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்த நண்பர்களை தேடி வந்தனர்.

இதையடுத்து அவரை, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கு, தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்த அந்த இளம் பெண்ணின், உடல் சமீபத்தில் மோசமானது. இந்நிலையில் அவர் நேற்று உயிரிழந்தார்.

இந்த வழக்கில் குற்றவாளிகளை இதுவரை கைது செய்யாததைக் கண்டித்து காவல் நிலையத்தில் முன் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக தேசிய மாநாட்டுக் கட்சியின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.