இந்தியா

உ.பி: தனது மகளை காக்க சிறுத்தையை தடியால் விரட்டி அடித்த தாய்

EllusamyKarthik

வீரமே வாகை சூடும் என்பார்கள். அந்த வகையில் உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளை சிறுத்தையின் தாக்குதலிலிருந்து மீட்கும் நோக்கில் தடியெடுத்து சிறுத்தையை விரட்டி அடித்துள்ளார். இந்த சம்பவம் அந்த மாநிலத்தில் உள்ள பஹ்ரைச் மாவட்டத்தின் கிர்டா கிராமத்தில் நடைபெற்றுள்ளது. 

இந்த சம்பவத்தின்போது அந்த பெண்ணின் ஆறு வயது மகள் வீட்டின் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அந்த பெண் வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது சிறுத்தை அவரது மகளை தாக்கியுள்ளது. மேலும் அந்த சிறுமியை இழுத்துச் செல்லவும் முயன்றுள்ளது. அப்போது அந்த சிறுமி கூக்குரல் எழுப்பியுள்ளார்.  

மகளின் அலறல் சத்தத்தை கேட்டு வந்து பார்த்த அந்த பெண் சிறுத்தையை கவனித்துள்ளார். உடனடியாக துணிச்சலுடன் நீளமான தடியை எடுத்து சிறுத்தையை ஒரு அடி அடித்துள்ளார். அந்த அடியை வாங்கிய சிறுத்தை அங்கிருத்து தப்பிச் சென்றுள்ளது. சிறுத்தை தாக்கியதில் அந்த சிறுமிக்கு தலை மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.