பன்னாட்டு கார்ப்ரேட் நிறுவனங்களில் முன்னணி நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.2 கோடி சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார் காவலர் ஒருவரின் மகள்.
ஹைதராபாத் போலீஸ் கமிஷனரேட்டில் தடயவியல் நிபுணராக பணியாற்றி வருபவர் வெங்கண்ணா. இவரின் மகள் தீப்தி நர்குட்டி என்பவர் தான் இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறார். ஹைதராபாத் தான் இவர்களின் பூர்வீகம். தீப்தி, ஹைதராபாத் உஸ்மானியா பொறியியல் கல்லூரியில் தனது பொறியில் படிப்பை முடித்தவர்.
பொறியியல் படிப்பை முடித்த பின் JPMorgan Chase நிறுவனத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக 3 ஆண்டுகள் பணியாற்றியபோது உயர் கல்வியில் ஆர்வம் ஏற்பட, பின்னர் உயர் கல்விக்காக அமெரிக்காவுக்கு பறந்தார். அதன்படி, ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் ஸ்காலர்ஷிப் பெற்ற தீப்தி அங்கேயே எம்.எஸ். கம்ப்யூட்டர்ஸ் (MS Computers) முதுகலை படிப்பை நிறைவு செய்தார்.
இதற்கிடையே, தான் அங்கு நடந்த கேம்பஸ் இன்டர்வியூவில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஆண்டுக்கு ரூ.2 கோடி சம்பளத்துடன் ஆஃபர் வழங்கியுள்ளது. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் மென்பொருள் மேம்பாட்டு பொறியாளர் கிரேட் -2 (software development engineer grade-2 group) பணியிடத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் தீப்தி. அதன்படி, அமெரிக்காவின் சியாட்டிலில் உள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமையகத்தில் இந்த மாத தொடக்கத்தில் வேலையில் சேர்ந்தார்.
முன்னதாக, ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் எம்.எஸ். கம்ப்யூட்டர்ஸ் (MS Computers) முதுகலை படிப்பை நிறைவு செய்யும் முன்பே, பல நிறுவனங்கள் தீப்தியின் திறமையை பார்த்து பல சலுகைகளை வழங்க முன்வந்தன. அமேசான், கோல்ட்மேன் மற்றும் சாச்ஸ் (Sachs)ஆகியவை இதில் அடக்கம். ஆனால், சிறிது கால யோசனைக்கு பின்பு தீப்தி மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை டிக் அடித்துள்ளார். ஏனென்றால் சில வருடங்கள் முன்பு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் ஸ்டூடன்ட் அசோசியேட்டாக (Microsoft Student Associate) பணியாற்றிய அனுபவம் இருக்க அந்த நிறுவனத்தை தேர்வு செய்துள்ளார்.
இதற்கிடையே, ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் நடந்த கேம்பஸ் இன்டர்வியூவில் பங்கேற்ற சுமார் 300 மாணவர்களில், மிக உயர்ந்த ஆண்டு சம்பள பேக்கேஜை தீப்தி மட்டுமே பெற்றிருக்கிறார் என்பது கூடுதல் சிறப்பு. சாஃப்ட்வேரில் கோடிங் செய்வதை மிகவும் நேசிக்கும் தீப்தி அதில் அதிக ஈடுபாடு காண்பித்து வந்தார். அதுவே தற்போது அவருக்கு இவ்வளவு பெரிய உயரத்தை கொடுத்துள்ளது.