இந்தியா

தனிப்பட்ட போட்டோவை பகிர்ந்த பெண் : பணம் கேட்டு மிரட்டும் ஆன்லைன் நண்பர்

webteam

ஆன்லைன் மூலம் அறிமுகமான நண்பருக்கு தனிப்பட்ட போட்டோ மற்றும் வீடியோவை தவறுதலாக பகிர்ந்த பெண் சிக்கலில் சிக்கினார்.

மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த 27 வயது பெண், கடந்த ஒரு வருடமாக சமூக வலைத்தளம் ஒன்றில் முன்பின் அறிமுகம் இல்லாத நபருடன் நட்பாக பழகி வந்துள்ளார். நட்பு அதிகரிக்க இருவரும் போன் நம்பர்களை பகிர்ந்துகொண்டு ஆன்லைன் மெசெஜ் செயலி மூலம் உரையாடி வந்துள்ளனர். இந்நிலையில் அப்பெண்ணின் போனில் இருந்த தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அந்த நபருக்கு ஆன்லைன் மூலம் பகிரப்பட்டிருக்கிறது.

இந்த போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை வைத்துக்கொண்டு அந்த நபர் அப்பெண்ணை மிரட்டத் தொடங்கியுள்ளார். ரூ.40 ஆயிரம் தர வேண்டும் எனவும், இல்லையென்றால் தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஆன்லைனில் பகிர்ந்து வைரலாக்கிவிடுவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் அச்சமடைந்த அப்பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரில், கடந்த வருடம் டிசம்பர் மாதம் தனது போனின் டிஸ்ப்ளே உடைந்து பழுதாகி விட்டதாகவும், அதனால் அவ்வப்போது டச் ஸ்கீரின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் தவறுதலாக தனது தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், தனது ஆன்லைன் நண்பருக்கு பகிரப்பட்டுவிட்டதாகவும், அதை வைத்துக்கொண்டு அந்நபர் மிரட்டுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். அந்த நபரை நேரில் ஒருமுறை கூட தான் பார்த்ததில்லை எனவும், அவரது உண்மையான பெயர் கூட தெரியாது எனவும் அப்பெண் தெரிவித்துள்ளார்.