இந்தியா

‘பேஸ்புக் கணக்கை என் மனைவி ஹேக் செய்துவிட்டார்’: புவனேஸ்வர் குமார்

webteam

மனைவி தன்னுடைய பேஸ்புக் கணக்கை ஹேக் செய்துவிட்டதாக புவனேஷ்வர் குமார் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது கூறினார்.

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார். இவர் இந்திய அணியில் உள்ள அமைதியான குணமுடைய வீரர்களில் ஒருவர். கடுமையான போட்டிகளின் போதுகூட மிக மென்மையான பேச்சு, எப்போதும் மலர்ந்த முகம் என ஆடுகளத்தை ஆக்கிரமிக்கும் புன்னகைக்குச் சொந்தக்காரர். இவர் சமீபத்தில் கிரிக்பஸின் ‘ஸ்பைசி பிட்ச்’ என்ற அரட்டை நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். அப்போது அவர் தனது சொந்த வாழ்க்கையைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் இவரது மனைவி நுபூர் தாகரும் இடம்பெற்றார்.

மனைவியுடனான தனது வாழ்க்கை பற்றிப் பேசினார் புவனேஷ்வர். அப்போது தனது மனைவி நுபூர் தன் பேஸ்புக் கணக்கை ஹேக் செய்துவிட்டதாகவும் அதன் பின்னர் தனது கணக்கைப் பயன்படுத்த முடியவில்லை என்றும் கூறினார். இது குறித்து உவனேஷ்வர், “அவள் (நுபூர்) என்னிடம் பேஸ்புக் பாஸ்வேர்ட்டை கேட்டாள். ஆனால் நான் சில சாக்குப்போக்குகளைச் சொல்லிச் சமாளித்தேன். ஆனால், அடுத்த நாளே அவள் என்னிடம் ‘இது உங்கள் புதிய பாஸ்வேட்’ என்று கூறுகிறாள். அவள் உண்மையிலேயே எனது கணக்கை ஹேக் செய்துவிட்டார். அதன்பிறகு நான் பேஸ்புக் கணக்கை பயன்படுத்தவேயில்லை ” என்று நிகழ்ச்சியின் போது வெளிப்படையாகக் கூறினார்.

மேலும் நிகழ்ச்சியின் போது இந்த ஜோடி சில விளையாட்டான தகவல்களைப் பகிர்ந்து கொண்டது. அதாவது, ‘பெண் ரசிகர்களுடன் புவனேஷ்வர் புகைப்படங்களைப் எடுத்துக் கொள்வதைப் பார்க்கும்போது, நான் எப்படி எரிச்சலடைகிறேன் தெரியுமா?’ என்று நுபூர் மனம் விட்டுப் பேசினார்.

இது குறித்து நுபூர், "அவர் படத்தைக் கிளிக் செய்யும் போது, இவ்வளவு நெருக்கமாக ரசிகைகளுடன் நிற்க வேண்டிய அவசியம் என்ன? என்பதை நான் அவரிடம் கேட்பேன். ரசிகைகளிடம் சிறிது இடைவெளிவிட்டு நிற்க சொல்ல முடியவில்லையா? என்றும் கேட்பேன். அதற்கு அவர், என்னுடன் நெருக்கமாக அவர்கள் நின்றால் நான் என்ன செய்ய முடியும் என்று கூறுகிறார்,”எனக் கூறியுள்ளார்.

2017 நவம்பர் 13 அன்று மணமாவதற்கு முன்பு இருந்தே, அதாவது 13 வயதிலிருந்தே தனக்கு நுபூர் மீது ஈர்ப்பு இருப்பதாகவும், இருவரும் எப்படி நெருங்கம் ஆனார்கள் என்பது பற்றி புவனேஷ்வர் விளக்கமாக இந்நிகழ்ச்சியில் தெரிவித்தார்.