இந்தியா

“ஜெயலலிதா வீட்டை நினைவிடமாக்குவது அவசியமா?” - நீதிமன்றம் கேள்வி

“ஜெயலலிதா வீட்டை நினைவிடமாக்குவது அவசியமா?” - நீதிமன்றம் கேள்வி

Rasus

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இல்லத்தை மக்கள் பணத்தில் நினைவிடமாக மாற்றுவதன் அவசியம் என்ன என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க தனி நிர்வாகியை நியமிக்க கோரி புகழேந்தி என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதில் ஜெயலலிதாவிற்கு 913 கோடிக்கு மேல் சொத்துகள் இருப்பதாகவும், இவற்றை யார் நிர்வகிக்க வேண்டும் என ஜெயலலிதா உயில் இல்லாததால், உயர்நீதிமன்றம் நிர்வாகியை நியமிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

இதனிடையே இந்த வழக்கில் நிர்வாகிகளாக தங்களை நியமிக்க வேண்டுமென தீபக், தீபா தரப்பில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து ஜெயலலிதாவின் சொத்துகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி அறிக்கை தாக்கல் செய்த வருமான வரித்துறை, வரி பாக்கிகளுக்காக ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம், ஹைதராபாத்தில் உள்ள வீடு உள்ளிட்ட 4 சொத்துகள் 2007, 2013 ஆண்டுகளில் முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், 1000 கோடி வரையிலான ஜெயலலிதாவின் சொத்துகளை தனி நபர் ஒருவர் நிர்வகிக்க கேட்க முடியாது என்பதால், தீபக், தீபா ஆகியோரின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் என்.கிருபாகரன்- அப்துல் குத்தூஸ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி வழக்கை ஒத்திவைக்க வேண்டுமென கோரினார். அப்போது, தீபா, தீபக் தரப்பு வழக்கறிஞர்கள், அரசு நினைவிடமாக வேதா நிலையத்தை மாற்ற ஆட்சேபிக்கிறோம் என்றும், தங்கள் ஆட்சேபனையை மாவட்ட ஆட்சியரிடமும் தெரிவித்துள்ளோம் என்றும் கூறினர். மேலும் நகரின் மையப்பகுதியில் உள்ள 10 கிரவுண்ட் நிலத்தை வெறும் 35 கோடி ரூபாய்க்கு எடுப்பதாக அரசு அறிவித்துள்ளதாகவும், ஆனால் அது 100 கோடி ரூபாய்க்கு மேல் சந்தை மதிப்பு கொண்ட இடம் என்றும் தெரிவித்தனர்.

அப்போது நீதிபதிகள், அவரின் பெயரை நிலைக்க செய்வதற்கு பல வழிகள் இருக்கின்றதே. அமைச்சர்கள் கூட தினமும் தங்கள் பேச்சை தொடங்கும்போதே, ஜெயலலிதாவை புகழ்ந்துதானே பேச தொடங்குகிறார்கள். ஜெயலலிதா இல்லத்தை மக்கள் பணத்தில் நினைவிடமாக மாற்றுவதன் அவசியம் என்ன? கோடநாட்டில் தங்கினார் என்பதால் அதையும் மாற்றுவீர்களா?? எனக் கேள்வி எழுப்பினார். இதனையடுத்து அனைத்து தரப்பு வாதங்களுக்காக ஜூலை 22 மதியம் 2:15க்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.