இந்தியா

‘பிரதமரை வரவேற்க விமான நிலையம் செல்லாதது ஏன்?’ - பஞ்சாப் முதல்வர் விளக்கம்

‘பிரதமரை வரவேற்க விமான நிலையம் செல்லாதது ஏன்?’ - பஞ்சாப் முதல்வர் விளக்கம்

Veeramani

தனது செயலாளர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதால் விமான நிலையத்திற்கு சென்று பிரதமரை வரவேற்கவில்லை என்று பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக பேசிய பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, "மோசமான வானிலை மற்றும் எதிர்ப்புகள் காரணமாக பயணத்தை நிறுத்துமாறு பிரதமரிடம் கேட்டுக் கொண்டோம். ஆனால் ,அவரது திடீர் பாதை மாற்றம் குறித்து எங்களுக்கு எந்த தகவலும் இல்லை. பிரதமர் வருகையின் போது பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை, நானும் பல சமயங்களில் எதிர்ப்பாளர்களை சந்திக்கிறேன்.

பிரதமர் மோடி இன்று ஃபெரோஸ்பூர் மாவட்டத்திற்கு செல்லமுடியாமல் திரும்பியதற்கு நான் வருந்துகிறேன். நாங்கள் எங்கள் பிரதமரை மதிக்கிறோம், எனது செயலாளருக்கு கோவிட் பாசிட்டிவ் என்று பரிசோதனை செய்ததை அடுத்து, பிரதமரை வரவேற்க அமைச்சர் அனுப்பப்பட்டார்" என்று தெரிவித்தார்

பிரதமர் மோடி இன்று ஃபெரோஸ்பூரில் ஒரு பேரணியில் உரையாற்ற திட்டமிட்டிருந்தார். அதற்காக ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்துக்கு ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி செல்லவிருந்தார். ஆனால், மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக, அவர் சாலை வழியாகப் பயணம் செய்ய முடியவில்லை, இந்த நிலையில் பிரதமர் மோடியின் கன்வாயை விவசாயிகள் தடுத்ததால், பிரதமர் மற்றும் அவரின் பாதுகாப்பு வாகனங்கள் மேம்பாலில் சுமார் 20 நிமிடங்கள் சிக்கிக்கொண்டதால், பிரதமரின் பயணம் ரத்து செய்யப்பட்டது.

"மோசமான வானிலை காரணமாக பிரதமரின் ஹெலிகாப்டர் பயணம் ரத்து செய்யப்பட்டதால், சாலை மார்க்கமாக பயணிக்க காவல்துறைக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக பஞ்சாப் டிஜிபி தெரிவித்ததை தொடர்ந்து அவர் சாலை மார்க்கமாக பயணிக்கத் தொடங்கினார். ஆனால் பஞ்சாப் அரசு பாதுகாப்பை நிலைநிறுத்தத் தவறி விட்டது " என்று மத்திய உள்துறை அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.