காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடித்துத்தரக்கோரி வைகோ உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
கடந்த வாரம் உச்சநீதிமன்றத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், சென்னையில் 15ஆம் தேதி நடைபெறும் அண்ணா மாநாட்டில் கலந்து கொள்ள பல்வேறு தலைவர்களுக்கு விடுக்கப்படுவதாகவும், அந்த வகையில் ஃபரூக் அப்துல்லாவை அழைக்க முற்பட்டபோது அது முடியவில்லை என்று கூறியிருந்தார். அவர் எங்கிருக்கிறார் என்பதும் தெரியவில்லை என்றும், எனவே அவரைக் கண்டுபிடித்து தர வேண்டும் வலியுறுத்தியிருந்தார். இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
இந்நிலையில் இன்று வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா எங்கு இருக்கிறார் என்பது பற்றி வரும் 30ஆம் தேதிக்குள் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதைத்தொடர்ந்து ஃபரூக் அப்துல்லா மக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.