5,000 ரூபாய்க்கு மேல் செலவு செய்கிறீர்களா? அப்படி என்றால் இனி உங்கள் உயர் அதிகாரியிடம் permission வாங்கிவிட்டு தான் செய்ய வேண்டும். அப்படி இல்லை என்றால் உங்களுக்கு சிக்கல் தான். இப்படி ஒரு வினோத உத்தரவை ஒரு மாநில அரசே பிறப்பித்துள்ளது. அதற்கான அரசாணையையும் வெளியிட்டுள்ளது. என்னதான் காரணம் என பார்ப்போம்.
உங்களுக்கு துணி வாங்க வேண்டுமா? உங்களுக்காக ஒரு ஸ்மார்ட்போன் அல்லது வீட்டிற்கு மிக்சி கிரைண்டரை வாங்க வேண்டுமா? அதுவும் பட்ஜெட் 5000 மேல் போகிறதா? இதெல்லாம் செய்யவேண்டுமானால், உத்தரகண்ட் அரசு ஊழியராக இருந்தால் இனி அது அவ்வளவு சுலபம் இல்லை. 5000 ரூபாய்க்கு மேல் செலவு செய்ய உத்தரகண்ட் அரசு ஊழியர் அவரது உயர் அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டியிருக்கும்.
ஜூலை 14 தேதியிட்ட ஒரு வினோதமான உத்தரவில், உத்தரகண்ட் அரசு, "ஒரு மாத ஊதியம் அல்லது ரூ. 5,000-ஐ விட அதிகமான மதிப்புள்ள எந்தவொரு அசையும் சொத்தையும் விற்க அல்லது வாங்க அல்லது வேறு வழியில் பரிவர்த்தனை செய்யும்பொது எந்தவொரு அரசு ஊழியரும், அத்தகைய பரிவர்த்தனையை உடனடியாக அவர்களது உயர் அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும்" என்று கூறியுள்ளது.
அசையாச் சொத்துக்களைப் பொறுத்தவரை, அரசு ஊழியர்கள் வாங்க அல்லது விற்க முன்னதாக துறைத் தலைவர் அல்லது உயர் அதிகாரியின் அனுமதியைப் பெற வேண்டும். அத்தகைய சொத்துக்களை குத்தகைக்கு விடுவது மற்றும் பரிசாக கொடுப்பது பற்றியும் இந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் பணியில் சேரும் போதும், அதற்குப் பிறகு ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் அனைத்து அசையாச் சொத்துக்களை குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும் என அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது. வாழ்க்கைத் துணைவர்கள் அல்லது ஒரே வீட்டில் வசிக்கும் குடும்பத்தின் எந்தவொரு உறுப்பினருக்கும் இது பொருந்தும்.
இந்த அறிவிப்பு ஊழியர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரகாண்ட் எஸ்சி-எஸ்டி ஊழியர் கூட்டமைப்பின் தலைவர் கரம் ராம், இந்த உத்தரவை அபத்தமானதுஎன்று கூறி இருக்கிறார். அதை திரும்பப் பெற வேண்டும் என்றார். "எனவும் வலியுறுத்து இருக்கிறார். வீட்டில் மனைவி , குழந்தைகளுக்காக நீங்கள் வாங்கச் செல்லும் கிட்டத்தட்ட எல்லாமே ரூ. 5,000 க்கும் அதிகமாக செலவாகும். "உங்க மனைவிக்கு சேலை வாங்கணும்னா, அதுக்கும் துறைத் தலைவரிடம் அனுமதி வாங்கணுமா? குழந்தைகளுக்கு துணி வாங்க அனுமதி வாங்கணுமா?" என ஆவேசமாக கேட்டுள்ளார். ஆலோசனைகளுக்குப் பிறகு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், ரூ.5,000 என்ற வரம்பை ரூ.1 லட்சமாக உயர்த்த வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.
மற்ற ஊழியர்கள் இது குறித்து கூறியபோது, சொத்து அல்லது வாகனங்கள் போன்றவைகளுக்கு அனுமதி பெற வேண்டும் என கூறலாம். ஆனால் ரூ.5,000 என்பது அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.