கர்நாடகா, கடக் மாவட்டத்தில் உள்ள ஷிங்கடலூர் கிராமத்தில் பட்டியலின வகுப்பினருக்கு முடிவெட்டக் கூடாது என உயர் சாதியினர் கொடுத்த அழுத்தத்தால், அப்பக்குதியில் உள்ள முடிதிருத்தும் கடைக்காரர் முடிவெட்ட மறுத்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து கர்நாடக அரசின் உதவியுடன் பட்டியலின மக்களுக்காக ஒரு முடிதிருத்தும் கடை திறக்கப்பட்டுள்ளது என்று சமூக நலத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த கிராமத்தில் உள்ள பட்டியலின மக்களுக்கு முடிவெட்டும் சேவை பல வருடங்களாக தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்திருக்கிறது. இதனால் அவர்கள் முடி வெட்டுவதற்காக பக்கத்துக் கிராமங்களுக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்திருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து சமூக நலத்துறை, தாலுகா நிர்வாகம், தாலுகா பஞ்சாயத்து, பட்டியலின அமைப்புகளின் அமைப்பு மற்றும் சிவசரண ஹடபடா அப்பன்னா சமூகம் ஆகியவை இணைந்து அச்சமுதாய மக்களுக்காக இந்தக் கடையை அமைத்துக் கொடுத்திருக்கிறது.
"சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் அடிப்படை சேவைகளுக்குச் சமமான அணுகலை உறுதி செய்வதற்கும் தீண்டாமை ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் இணக்கமான வாழ்க்கைத் திட்டத்தின்கீழ் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது" என்று சமூக நலத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
வீரபத்ரேஸ்வர சுவாமி ஒவ்வொரு வருடமும் மகாநவமியின் போது ஹடபாடா சமூக உறுப்பினர்களின் வீடுகளுக்குச் செல்வதாகவும், அந்த நேரத்தில், பட்டியலின மக்களின் தலைமுடியை வெட்டுவது துரதிர்ஷ்டத்தைத் தரும் என்றும் கிராமத்தில் ஒரு மூடநம்பிக்கை நிலவியதாகக் கூறப்படுகிறது.
இந்த மூடநம்பிக்கையைக் காரணம் காட்டி, சிலர் அந்த இன மக்களுக்கு முடிதிருத்தம் செய்வதை நிறுத்தியுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள் சமர்ப்பித்த மனுக்களைத் தொடர்ந்து, அதிகாரிகள் தலையிட்டு நிரந்தர தீர்வு ஏற்படுவதை உறுதி செய்துள்ளனர்.