Parag Shah ani
இந்தியா

ரூ.3,383 கோடி சொத்து.. ஒரேநாளில் வீதிக்கு வந்த MLA.. பின்னணி என்ன?

மும்பை வீதிகளில் ஒரு நாள் முழுவதும் பிச்சைக்காரராக வலம் வந்திருக்கிறார் பாஜக எம்எல்ஏ ஒருவர்.

PT WEB

வர்த்தகத்தில் திளைக்கும் மும்பை என்றாலே பிரம்மாண்டமான வாழ்க்கை முறை, பணக்காரர்கள், தொழிலதிபர்கள், பிரபலங்கள், தொழில் நகரம் என பல விஷயங்கள் நினைவுக்கு வரும். அதே மும்பை வீதிகளில் ஒருநாள் முழுவதும் பிச்சைக்காரராக வலம் வந்திருக்கிறார் பாஜக எம்எல்ஏ ஒருவர். அவர் பிச்சைக்காரராக மாறியதற்குக் காரணம் என்ன போன்ற கேள்விகளைப் பலருக்கும் எழுப்பி இருக்கிறது. மகாராஷ்டிராவின் பணக்கார எம்எல்ஏக்களில் ஒருவராக இருக்கிறார் மும்பையின் காட்கோபர் கிழக்குத் தொகுதி பாஜக எம்எல்ஏ பராக் ஷா. 3,383 கோடி ரூபாய் சொத்து வைத்திருக்கும் இவர், பிச்சைக்காரர்போல மும்பை சாலைகளில் அலைந்து திரிந்து பிச்சை எடுக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆரம்பத்தில் இந்த வீடியோவைப் பார்த்த பலரும், “எதற்காக ஒரு எம்எல்ஏ இப்படி பிச்சைக்காரர் வேடத்தில் இருக்கிறார்?” என ஆச்சரியப்பட்ட நிலையில், அதற்கான காரணமும் தற்போது வெளியாகியுள்ளது.

mumbai

தொழிலதிபராகவும், ரியல் எஸ்டேட் துறையில் முக்கியப் பங்கு வகிப்பவராகவும் இருக்கும் பராக் ஷா, தனது ஜெயின் ஆன்மிக குருவான நம்ரமுனியின் அறிவுரையின் பேரில் இந்த முயற்சியை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார். ஜெயின் மத பாரம்பரியத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் சிறப்பு மாதத்தையொட்டி, தன்னிடம் இருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள், கார்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் என அனைத்தையும் ஒதுக்கிவிட்டு, ஒருநாள் முழுவதும் பிச்சைக்காரர் போல வாழுமாறு அவரது குரு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, யாருக்கும் தன்னை அடையாளம் தெரியாத வகையில் மேக்கப் போட்டுக்கொண்ட பராக் ஷா, தனது பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் வாகனங்களைத் தவிர்த்துவிட்டு மும்பை காட்கோபர் பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு பிச்சைக்காரர்போல பல மணி நேரம் சாலையோரங்களில் அமர்ந்தும், பொதுமக்களிடம் யாசகம் கேட்டும் தனது நாளை கழித்துள்ளார்.

இந்த அனுபவம் குறித்து பேசிய பராக் ஷா, வாழ்க்கையின் உண்மையான நிலையை இந்த அனுபவம் தனக்கு உணர்த்தியதாக தெரிவித்துள்ளார். “நீங்கள் செல்லும் இடங்களில் உங்களைச் சந்திக்க மக்கள் வரிசையில் நிற்பார்கள். ஆனால், அதே நபர்களிடம் நீங்கள் சென்று நிற்கும்போது, அவர்கள் உங்களைவிட உயர்ந்தவர்களாகத் தெரிகிறார்கள். இதுதான் வாழ்க்கையின் உண்மை” என அவர் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, மும்பை மக்களின் உதவும் மனப்பான்மையையும் இந்த அனுபவம் தனக்கு உணர்த்தியதாக பராக் ஷா தெரிவித்துள்ளார். மேலும் எனக்கு ஒரு நபர் தன்னிடம் ரூ.20 கொடுத்து, ’போய்ச் சாப்பிடுங்கள்’ எனக் கூறியதாகவும், அதன்பிறகு சாலையோரத்தில் சமோசா விற்றுக்கொண்டிருந்த நபரிடம் பணம் இல்லை எனக் கூறியபோது, அவர் பணம் வாங்காமலேயே சமோசா கொடுத்ததாகவும் பராக் ஷா தெரிவித்துள்ளார்.

Parag Shah

குறிப்பாக, அந்த சமோசா விற்பனையாளர் மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்தபோதிலும், தான் பணம் இல்லை எனக் கூறியபோது எந்தவித தயக்கமும் இல்லாமல் புன்னகையுடன் உணவு கொடுத்தது தன்னை நெகிழ வைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.