காவிரி நீரை எந்தவொரு மாநிலமும் சொந்தம் கொண்டாட உரிமை இல்லை என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தார்.
தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா தடையின்றி வழங்க வேண்டும்.
1892 மற்றும் 1924 ஆகிய ஆண்டுகளில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் செல்லுபடியாகும். தமிழகத்தின் அனுமதியின்றி கர்நாடகா புதிய அணைகள் கட்டக் கூடாது என்பதும் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டது. இதன்படி காவிரி மேலாண்மை ஆணையம் பின்னர் அமைக்கப்பட்டது.
காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு அடுத்த 15 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என்பதும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் முக்கிய அம்சமாகும்.
காவிரி தொடர்பான இறுதித் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இயலாது என்பதும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஜூன் முதல் அக்டோபர் மாதம் வரையிலான காலகட்டத்தில் தமிழகத்துக்கு கர்நாடகம், காவிரி நீரை வழங்க வேண்டிய அளவு குறித்து உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டது.
உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி, ஜூன் மாதம் – 9.19 டிஎம்சி, ஜூலை மாதம் – 31. 24 டிஎம்சி, ஆகஸ்ட் மாதம் – 45.95 டிஎம்சி, செப்டம்பர் மாதம் – 36.76 டிஎம்சி, அக்டோபர் மாதம் – 16.61 டிஎம்சி தண்ணீர் தரப்பட வேண்டும். எஞ்சிய நீர், மற்ற மாதங்களில் வழங்க வேண்டிய பங்கீடாக இருக்கிறது.