நாகாலாந்து மாநிலத்தில் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். பொதுமக்கள் மீதே பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பயங்கரவாதிகளை அடையாளம் காண்பதில் ஏற்பட்ட தவறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதா என விசாரணை நடந்து வருகிறது.
அதே நேரத்தில் ஆவேசமடைந்த மக்கள், பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் மத்திய அரசிடம் இந்த விவகாரம் தொடர்பாக கேள்விகளை முன்வைத்துள்ளது காங்கிரஸ் கட்சி.
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
“நமது சொந்த மண்ணில் பொது மக்களும் சரி, பாதுகாப்பு படை வீரர்களும் சரி இங்கு யாருக்குமே பாதுகாப்பு என்பது இல்லை. உள்துறை அமைச்சகம் என்னதான் செய்கிறது? இது தொடர்பான உண்மையான பதிலை இந்திய அரசு கொடுக்க வேண்டும். நெஞ்சை உலுக்கும் சம்பவம் இது” என தெரிவித்துள்ளார் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி.
“நாகாலாந்தில் இருந்து வரும் செய்திகள் நெஞ்சை பதபதைக்க செய்கின்றன. தங்களது உறவுகளை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். நீதி கிடைக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார் பிரியங்கா காந்தி.
“நாகலந்தில் இருந்து வந்துள்ள செய்திகள் வேதனை அளிக்கின்றன. வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் இது மாதிரியான சம்பவங்கள் சட்டம் மற்றும் ஒழுங்கை மோடி அரசு காக்க தவறியதை சுட்டிக் காட்டுகிறது. இது தேசிய பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கி உள்ளது.
பிரதமரும், உள்துறை அமைச்சரும் நமது நாட்டு மக்கள் மற்றும் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பை ஏன் உங்களால் உறுதிப்படுத்த முடியவில்லை?” என காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் மூலம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Tragic news from <a href="https://twitter.com/hashtag/Nagaland?src=hash&ref_src=twsrc%5Etfw">#Nagaland</a> is highly distressing.<br><br>Repeated incidents of violence in North East is a clear indication of Modi govt's failure to maintain law & order & protect national security.<br><br>PM & HM- why is Govt unable to ensure safety of our civilians & security personnel? <a href="https://t.co/cxwWSlT1PN">pic.twitter.com/cxwWSlT1PN</a></p>— Congress (@INCIndia) <a href="https://twitter.com/INCIndia/status/1467390994572210178?ref_src=twsrc%5Etfw">December 5, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
என்ன நடந்தது?
நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் உள்ள ஓடிங் மற்றும் திரு கிராமங்களுக்கு இடையே உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏராளமான கூலித் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பணி முடிந்து அவர்கள் நேற்று மாலை ஒரு வேனில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது மோன் மாவட்டத்தில் நாகாலாந்தின் தேசிய சோஷியலிச பிரிவினைவாத அமைப்பின் கிளை அமைப்பான யுங் ஆங் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனால், அப்பகுதியில் தாக்குதல் நடத்த பாதுகாப்பு படையினர் தயாராக இருந்ததாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் கூலித் தொழிலாளர்கள் வந்த வேன் சத்தத்தை கேட்டதும், அதிரடியாக துப்பாக்கியால் சுட ஆரம்பித்துள்ளனர். இதில், அப்பாவி பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்து அண்டை மாநிலமான அசாமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நாகாலாந்து முதல்வர் நெய்ப்யூ ரியோ தவறுதலாக சுடப்பட்டது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடப்படும் என தெரிவித்துள்ளார். பொதுமக்கள் மீதே பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பதால் நாகாலாந்து முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதையடுத்து, பொதுமக்கள் அமைதி காக்குமாறு முதல்வர் ரியோ கேட்டுக் கொண்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்ற விசாரணை நடத்தப்படும் என அசாம் ரைபிள்ஸ் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மக்கள் திரளாக திரண்டு வந்து பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அதில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் மரணம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. பாதுகாப்பு படையினரின் வாகனத்திற்கும் தீ வைக்கப்பட்டுள்ளது.