கடும் எதிர்ப்புகளுக்கு இடையே முத்தலாக் தடுப்பு மசோதா மக்களவையில் நிறைவேறியது. இந்நிலையில் இம்மசோதாவின் முக்கிய அம்சங்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.
இஸ்லாமிய பெண்களின் திருமண உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டதே முத்தலாக் மசோதா ஆகும். ஒரே நேரத்தில் மும்முறை தலாக் கூறி திருமண முறிவு பெறுவதை தண்டனைக்குரிய குற்றம் என முத்தலாக் மசோதா கூறுகிறது. எழுத்து மூலமோ மின்னணு தகவல்தொடர்பு மூலமோ அல்லது வேறு எந்த வழியிலே முத்தலாக் கூறி மணமுறிவு பெற்றாலும் அது தண்டனைக்குரிய குற்றம் என இம்மசோதா கூறுகிறது.
முத்தலாக் குற்றம் இழைத்தவர்களுக்கு 3 ஆண்டு வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதத்தை விதிக்க இம்மசோதா வழி செய்கிறது. முத்தலாக் கூறி மணமுறிவு பெறுவது ஜாமீனில் வர முடியாத குற்றம் என்றாலும் பாதிக்கப்பட்டதாக கூறும் பெண் தரும் தகவல்கள் அடிப்படையில் நீதிபதி அவர் விருப்பப்படி ஜாமீன் வழங்க முடியும் என்றும் மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
முத்தலாக் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரின் குடும்பத்தினர் மட்டுமே புகார் அளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. பெண்ணின் சார்பில் மற்றவர்கள் புகார் அளிக்க முடியாது என்றும் முத்தலாக் வழக்கின்போது, கணவன், மனைவி இடையே சமரசம் ஏற்பட்டால், வழக்கை ரத்து செய்துவிட்டு மீண்டும் சேர்ந்து வாழவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பை பெண்ணே மாஜிஸ்திரேட்டிடம் கோரி பெறலாம் என்ற திருத்தமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.