டெல்லியில் கரப்பான் ஜனதா கட்சி தலைமையில் நீட் வினாத்தாள் கசிவு, கல்வி அமைச்சரின் பொறுப்பில்லா நடத்தை, குழந்தைகளின் எதிர்கால பாதுகாப்பு போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இளைஞர்கள், மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், பெற்றோர் என பல தரப்பினர் மாதக்கணக்கில் போராடி வருகின்றனர். ஜனநாயகத்தை காக்கும் இந்த போராட்டத்துக்கு அரசு பதில் அளிக்காதது மேலும் அதிருப்தியை கிளப்பியுள்ளது.
டெல்லியில் கரப்பான் ஜனதா கட்சி தலைமையில் நடைபெற்றுவரும் போராட்டத்தில் பல மாநிலங்களில் இருந்தும் மக்கள் கலந்துகொண்டிருக்கின்றனர். டெல்லியில் கல்லூரி பயிலும் மாணவி ஒருவர் கூறும்போது, தான் ஜனநாயகத்தை ஆதரிப்பதால் கரப்பான் ஜனதா கட்சியின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வந்துள்ளதாகத் தெரிவித்தார். கடந்த ஒரு மாத காலமாகப் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது என்றும் தங்கள் போராட்டத்துக்கு அரசு எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை என்றும் அந்த மாணவி தெரிவித்தார்.
உத்தர பிரதேசத்தின் கிராமப் பகுதியில் இருந்து போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள மாற்றுத்திறனாளி ஹரிஷ் சங்கர் சிங் பேசும்போது, மத்தியகல்வித் துறை அமைச்சர் தர்மேந்திரபிரதான் தான் நீட் வினாத்தாள் கசிவுக்குக் காரணம் என்று கூறியதோடு மத்தியக் கல்வி அமைச்சர் பதவியைக் கையாள முடியவில்லை என்றால் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று கூறினார்.
உத்தர பிரதேசத்திலிருந்து இந்தப்போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக வந்துள்ள மாணவர் ஒருவரின் தந்தைகூறும்போது இது ஒட்டுமொத்தகுழந்தைகளுக்காக நடத்தப்படும்போராட்டம் என்றும், குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க ஒன்றிணைந்து போராடி வருகிறோம் என்றும் தெரிவித்தார்.
இளைஞர்களின் போராட்டத்தால்டெல்லி மட்டுமல்ல இந்தியாவேகிளர்ந்தெழுந்துள்ளது. இளைஞர்களின் குரலுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும்என்பதே போராட்டக்காரர்கள், எதிர்க்கட்சிகள், பொதுமக்களின் குரலாகஇருக்கிறது.