Cockroach Party web
இந்தியா

புதிய சட்டம் இயற்றுவதிலிருந்து கடும் தண்டனை வரை.. CJP கட்சியின் கோரிக்கைகள் என்ன?

பொதுத்தேர்வுகளில் வெளிப்படைத்தன்மை, மாணவர் உரிமை பாதுகாப்பு, வினாத்தாள் கசிவுக்கு கடும் சிறைத் தண்டனை உள்ளிட்ட விரிவான சட்ட மாற்றங்களை கோருகிறது கரப்பான் கட்சி

PT WEB

கரப்பான் ஜனதா கட்சி தனது போராட்டங்களை கைவிட அரசிடம் மூன்று முக்கிய நிபந்தனைகள் முன்வைத்துள்ளது. பொதுத்தேர்வுகளில் வெளிப்படைத்தன்மை, தவறுகளுக்கு பொறுப்பேற்பு, மாணவர் உரிமைகள் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்யும் புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும் என வலியுறுத்துகிறது.

கரப்பான் ஜனதா கட்சி தனது போராட்டங்களை கைவிட 3 முக்கிய நிபந்தனைகளை அரசிடம் முன்வைத்துள்ளது. அதே நேரம் அதன் அடிப்படையான கோரிக்கைகள் மிகவும் விரிவானவை, ஆழமானவை.

cockroach party protest

பொதுத்தேர்வுகளில் வெளிப்படைத்தன்மை, தவறுகளுக்கு பொறுப்பேற்பு, மாணவர்கள் உரிமைகள் பாதுகாப்பு ஆகியவற்றை கொண்ட புதிய சட்டத்தை இயற்ற வேண்டும் என்பது சிஜெபியின் ஒரு கோரிக்கையாகும். வினாத்தாள் கசிந்தால் தொடர்புள்ளவர்களுக்கு 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை, நாடாளுமன்றத்தில் அமைச்சர் விளக்கம் தருவது உள்ளிட்டவற்றை இச்சட்டம் கொண்டிருக்கவேண்டும் என்று கூறுகிறது கரப்பான் கட்சி.

தற்போதைய தேசிய தேர்வு முகமையை கலைத்துவிட்டு சட்ட வரம்புக்குட்பட்ட தேசிய தேர்வு ஆணையத்தை அமைக்கவேண்டும் என்றும் அதன் செயல்பாடுகளை தலைமை கணக்காயர் உள்ளிட்ட வழிகளில் கண்காணிக்க வேண்டும் என்றும் கரப்பான் கட்சி கூறுகிறது. நீட் தேர்வு முறையிலிருந்து வெளியேற மாநிலங்களுக்கு அனுமதி அளிப்பதுடன் நீட் பாடத்திட்டத்தை முடிவு செய்வதில் மாநில அரசுகளின் பங்களிப்பையும் உறுதிசெய்யவேண்டும் என கரப்பான் கட்சி கூறுகிறது.

cockroach party protest

வினாத்தாள் கசிவு, தேர்வு ரத்து, தள்ளிவைப்பு போன்றவற்றால் பாதிக்கப்படும் மாணவர்களுக்கு இழப்பீடு, வயது வரம்பு தளர்வு உள்ளிட்ட சலுகைகள் வழங்கவேண்டும் என்றும் கரப்பான் கட்சி கோருகிறது. வினாத்தாள் கசிவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி தர தனி நிதியம் ஏற்படுத்தப்படவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கடந்த 12 ஆண்டுகளில் நிகழ்ந்த தேர்வு குளறுபடிகள், முறைகேடுகள், பணியாளர் சேர்ப்பில் தாமதம் குறித்து 6 மாதத்திற்குள் வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்கவும் கரப்பான் ஜனதா கட்சி கூறியுள்ளது. மாணவர்கள் உரிமை பாதுகாப்பு குறித்து ஆண்டுக்கு ஒரு முறை நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது