மாதிரிப்படம் freepik, x pages
இந்தியா

மேற்கு வங்கம் | காதலருடன் வாழ கணவரின் கிட்னியை விற்ற பெண்!

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது மகளின் கல்விக்காக பணத்தைச் சேமிக்க, அவரது கணவரின் சிறுநீரகத்தை விற்கச் சொல்லி வலியுறுத்தியுள்ளார்.

Prakash J

மேற்கு வங்காள மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் உள்ள சங்க்ரைலைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது மகள் மற்றும் கணவருடன் வசித்து வந்துள்ளார். அதேநேரத்தில் அந்தப் பெண் பாரக்பூரில் வசிக்கும் ரவிதாஸ் என்பவருடன் முகநூல் மூலம் அறிமுகமாகி உள்ளார். இது நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

கிட்னி

இதற்கிடையே, “நம் மகளின் கல்வி மற்றும் திருமணத்திற்காக பணத்தைச் சேமித்து வைக்க வேண்டும். அதற்காக உங்களது சிறுநீரகத்தை ரூ.10 லட்சத்திற்கு விற்றுவிடுங்கள்” என அந்தப் பெண் தன் கணவரிடம் வலியுறுத்தியுள்ளார். மனைவி வற்புறுத்தியதால் அவரும் சம்மதித்துள்ளார். இதையடுத்து, அவர் தனது கிட்னியை விற்பதற்காக பலரிடமும் முயன்றுள்ளார்.

ஒருகட்டத்தில், ஒரு வருடத்திற்குப் பிறகு, அதாவது கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தனது சிறுநீரகத்தை விற்று பணம் வாங்கி வந்துள்ளார். இதன்மூலம் தனது குடும்பத்தின் நிதி நிலைமை மேம்படும் என்று நம்பி இருந்த பெரும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. காரணம், இந்த பணத்தைப் பெற்ற அந்தப் பெண், வீட்டைவிட்டு வெளியேறிய அவர் காதலனுடன் தஞ்சமடைந்துள்ளார். தாம் ஏமாற்றப்பட்டோம் என்பதை அறிந்த அந்தப் பெண்ணின் கணவர், போலீஸில் புகார் அளித்தார்.

திருமணம்

இதற்கிடையே அந்தப் பெண் பாரக்பூரில் காதலர் ரவிதாஸுடன் சேர்ந்து வாழ்வதை அறிந்த கணவரின் குடும்பத்தினர், அவரது 10 வயது மகளை அழைத்துக்கொண்டு அந்த இடத்துக்குச் சென்றுள்ளனர். ஆனால், ரவியும் அந்த பெண்ணும் கதவை திறக்க மறுத்தனர். நீண்ட நேர காத்திருப்புக்கு பிறகு கதவை திறந்த அந்தப் பெண், "நீங்கள் செய்ய வேண்டியதை செய்யுங்கள். நான் விவாகரத்து கடிதம் அனுப்புகிறேன்" எனப் பதிலளித்துவிட்டு கதவை அடைத்துள்ளார். மாமனார், மாமியார், கணவன், பிள்ளைகள் என அனைவரும் எத்தனையோ முறை வேண்டுகோள் விடுத்தும் அந்தப் பெண் வெளியே வரவில்லை எனக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.