கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி நடத்திய போராட்டத்தில் அவரது கட்சியைச் சேர்ந்த 80 எம்எல்ஏக்களில் வெறும் 8 பேர் மட்டுமே கலந்துகொண்டதால் அவருக்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தவிர, கட்சியும் இரண்டாக உடையும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் பலத்த தோல்வியடைந்த திரிணாமுல் காங்கிரஸ் சமீபகாலமாக உட்கட்சிப் பூசலை எதிர்கொண்டு வருகிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு ஐ-பிஏசி என்ற அரசியல் ஆலோசனை நிறுவனமே காரணம் என அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். குறிப்பாக, மம்தாவின் நீண்டகால கூட்டாளியான ககோலி கோஷ் தஸ்திதாரே குற்றஞ்சாட்டியிருந்தார். தவிர, அக்கட்சிப் பொறுப்பிலிருந்தும் விலகியிருந்தார். இதைத் தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ் மீது சுமார் 50 எம்.எல்.ஏ.க்களும், 20 எம்பிக்களும் அதிருப்தியில் இருப்பதாகவும், கட்சியின் மத்திய தலைமை அனுமதி அளித்தால் அவர்கள் பாஜகவுக்கு மாறத் தயாராக இருப்பதாகவும் பாஜக எம்.பி. சௌமித்ரா கான் தெரிவித்திருந்தது மேற்கு வங்க அரசியலில் மேலும் புயலைக் கிளப்பியது.
இந்த நிலையில், தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் மேற்கு வங்கம் முழுவதும் பரவலாக வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறி வருவதுடன், டிஎம்சி தலைவர்களும் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இந்தப் போராட்டத்தில் அக்கட்சியைச் சேர்ந்த 80 எம்எல்ஏக்களில் வெறும் 8 பேர் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர். அதேபோல், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 29 எம்பிக்களில் 6 பேர் மட்டுமே இப்போராட்டத்தில் கலந்துகொண்டனர். அவர்கள் கலந்துகொள்ளாதது மம்தாவுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக நடைபெற்ற கட்சிக் கூட்டத்திற்கு 60 எம்எல்ஏக்கள் வராதது தலைமைக்கு அதிர்ச்சியை கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, மம்தாவுக்கு எதிரான அதிருப்தி எம்எல்ஏக்கள் பலர் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. முன்னதாக, தனது குடும்பத்தை வன்முறைக் கும்பலிடம் இருந்து காப்பாற்றியதற்காக பாஜக தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த திரிணாமுல் தேசியச் செய்தித் தொடர்பாளரான ரிஜு தத்தா அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதனால் கடும் கோபமடைந்த மம்தா பானர்ஜி, ரிஜுவைக் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்ததாக அறிவித்தார். மேலும் சிலரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். அவர்களில் 50 பேர் கட்சிக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். எனவே, திரிணாமுல் கட்சி இரண்டாக உடையும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஏஎன்ஐ செய்தி முகமைக்கு ரிஜு தத்தா அளித்துள்ள பேட்டியில், “எங்களுடன் ஐம்பது திரிணாமூல் எம்எல்ஏக்கள் இணைந்து செயல்படுகின்றனர். நாங்கள்தான் உண்மையான திரிணாமூல் காங்கிரஸ்” எனத் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், கட்சி ஆவணங்களில் இடம்பெற்றுள்ள நிர்வாகிகளின் கையெழுத்துகள் போலி என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணையும் நடைபெற்றது. மேலும், இவ்விவகாரம் குறித்துப் பேசிய மம்தா, ”தேர்தலில் வாக்குகளைக் கொள்ளையடித்த பிறகு, திரிணாமுல் கட்சியை உடைக்க பாஜக முயற்சிக்கிறது” எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.