294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு 152 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 23-ம் தேதி நடந்த நிலையில், 142 தொகுதிகளுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியிருக்கிறது. முதல்கட்ட வாக்குப்பதிவில், மேற்கு வங்கத் தேர்தல் வரலாற்றிலேயே அதிகபட்சமாக சுமார் 93.2 சதவீத வாக்குகள் பதிவானது. இந்தநிலையில் தான், இன்றும் அதிகப்படியான வாக்குப்பதிவு எதிர்பார்க்கப்படுகிறது.
கொல்கத்தா வடக்கு, கொல்கத்தா தெற்கு, ஹவுரா, நாடியா, தெற்கு 24 பர்கானாஸ், வடக்கு 24 பர்கானாஸ், ஹூக்ளி மற்றும் புர்தா பர்தாமன் ஆகிய 8 மாவட்டங்களில் உள்ள 142 தொகுதிகளுக்கு நடக்கும் இந்த இறுதிகட்ட வாக்குப்பதிவில், 3.23 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். இதில், 1.64 கோடி ஆண்களும், 1.57 கோடி பெண்களும், 792 மூன்றாம் பாலினத்தவர்களும் அடங்குவர். வாக்குப்பதிவுக்காக 41,001 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், 1,448 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய 4 மாநிலங்களுடன் சேர்த்து மேற்குவங்கத்துக்குமான வாக்கு எண்ணிக்கை மே-4 ம் தேதி நடைபெறவிருக்கிறது.
முன்னதாக, மேற்கு வங்கத் தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், எதிர்க்கட்சியான பாஜக, காங்கிரஸ் மற்றும் சிபிஎம் தலைமையிலான இடதுசாரிகள் கூட்டணி இடையே 4 முனைப் போட்டி நிலவிவருகிறது. 2011 முதன்முறையாக, மேற்குவங்கத்தின் ஆட்சியை மம்தா பானர்ஜி கைப்பற்றியதன் மூலம், 34 ஆண்டுகால இடது சாரி முன்னணியின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தார். அன்றிலிருந்து இன்று வரை மேற்கு வங்கத்தின் முதல்வராக 3 தேர்தெடுக்கப்பட்டுள்ள மம்தா, 4-வது முறையாக முதல்வராகும் நோக்கில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.
அதேசமயம், முதலில் எதிர்கட்சியாவது பிறகு ஆட்சியைப் பிடிப்பது என்ற நோக்கில் மேற்குவங்கத்தில் செயல்பட்டு வந்த பாஜக, 2011 வெறும் 4.06 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தது. தொடர்ந்து, 2016 தேர்தலில் 3 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக, 2021 தேர்தலில் 77 இடங்களைக் கைப்பற்றி எதிர்க்கட்சியாக விருக்கிறது. இடதுசாரிகள் மற்றும் திரிணாமுல் என்றிருந்த அரசியல்களம் வெகுவேகமாக திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக என மாறியிருக்கிறது. இந்தநிலையில் தான், 15 ஆண்டுகால திரிணாமுல் காங்கிரஸின் கோட்டையை பாஜக தகர்க்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.