இந்தியா

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளம்பெண்.. நண்பர்களுடன் சேர்ந்து தீயிட்டு கொளுத்திய குற்றவாளி..!

webteam

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிர் தப்பிய பெண், வன்கொடுமை செய்தவர்களால் தீயிட்டு கொளுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசம் உன்னாவில் உள்ள கிராமத்திற்கு வெளியே வயல்வெளிக்கு சென்ற இளம்பெண்ணை 5 நபர்கள் மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு கொளுத்தினர். பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அந்த பெண் உயிருக்கு போராடி வருகிறார். மேல் சிகிச்சைக்காக லக்னோ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். 

பாதிக்கப்பட்ட பெண் சில மாதங்களுக்கு முன்பு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானவர் எனவும் அவர் கடந்த மார்ச் மாதம் இதுகுறித்து புகார் அளித்தார் எனவும் போலீசார் தெரிவிக்கின்றனர். மேலும் அவரை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள்தான் தீயிட்டு கொளுத்தியுள்ளனர் எனவும் அந்த 5 பேரில் 3 பேரை கைது செய்துள்ளதாகவும் போலீசார் கூறுகின்றனர். 

இதுகுறித்து என்.சி.பி எம்.பி. மஜீத் மேமன் அதிர்ச்சியை வெளிப்படுத்தியதோடு, உன்னாவில் பாலியல் வன்கொடுமைக்கு பிறகு உயிர் தப்பியவர் தற்போது 80% தீக்காயங்களுடன் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடுகிறார் என்று கூறினார். மேலும், தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பாதிக்கப்பட்ட பெண் ஏற்கெனவே இரண்டு புகார் தெரிவித்திருந்தார். ஆனால் அவரை பாதுகாக்க முடியவில்லை. மனதை உருக்குகிறது” என மேமன் ட்வீட் செய்துள்ளார். 

ஒரு வாரத்திற்கு முன்பு ஹைதராபாத்தில் 26 வயது இளம் பெண் மருத்துவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பாலத்திற்கு அடியில் தீயிட்டு கொளுத்தி படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில், தற்போது இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.