model image
model image freepik
இந்தியா

நேரத்திற்கு வராத மணமகன்; ரூ35,000 பெற மணப்பெண் எடுத்த முடிவு! உ.பி திருமண திட்டத்தில் மீண்டும் மோசடி

Prakash J

’வேலையின்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் எம்.எல்.ஏ. தலைமையில் சில ஜோடிகளுக்கு திருமணம் செய்துவைத்து தங்க மோதிரம் அணிவிக்கப்படுவதாகக் காட்சி வைக்கப்பட்டிருக்கும். அதில் நடிகர் சூரி, புஷ்பா எனும் கேரக்டரில் நடித்திருந்த துணை நடிகையை திருமணம் செய்வதாகவும், அவருக்கும் ஒரு தங்க மோதிரம் பரிசாகக் கிடைப்பதாகவும் காட்சி இருக்கும். அதாவது, பரிசுகளைப் பெறுவதற்காக அந்த துணை நடிகை வேறுவேறு திருமணம் செய்வதாகவும், கடைசியில் அதில் நடிகர் சூரி சிக்கிக் கொள்வதாகவும் காட்சிகள் படைக்கப்பட்டிருக்கும். இதேபோன்ற ஒரு சம்பவம்தான் உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.

yogi

உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்வர் திருமண திட்டத்தின் ஜோடிகளுக்கு திருமணம் நடத்திவைக்கப்பட்டு, சீர்வரிசையாகப் பரிசுப் பொருட்கள் மற்றும் ரொக்கப் பணம் ஆகியன வழங்கப்பட்டு வருகிறது. முதலமைச்சரின் சமூக திருமண திட்டத்தின் கீழ் விதவைகள், விவாகரத்து மற்றும் கைவிடப்பட்ட பெண்கள் உள்ளிட்ட ஆதரவற்ற குடும்பங்களுக்கு அரசாங்கம் இந்த திருமணங்களை நடத்திவைக்கிறது. பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின மக்களும் இத்திட்டத்தின் கீழ் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி, ஜான்சி நகரில் 32 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. அப்போது, குஷி என்ற மணமகளுக்கு மத்தியப் பிரதேசத்தின் ரிஷ்பான் என்ற மணமனுடன் திருமணம் நடத்த முடிவுசெய்யப்பட்டு இருந்தது. நிச்சயித்தபடி, திருமண நிகழ்ச்சிக்கு சரியான நேரத்தில் மணமகன் வந்து சேரவில்லை. இதனால், அரசின் பலன்களை பெறுவதற்காக, உறவுக்கார இளைஞர் ஒருவரை குஷி திருமணம் செய்துகொண்டார். இந்த விவரம் தெரிய வந்ததும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிக்க: சந்தேஷ்காலி விவகாரம்: முக்கிய நபர் கைது.. கொண்டாடிய பெண்கள்.. மம்தா கட்சி எடுத்த அதிரடி முடிவு!

இதுபற்றி மாவட்ட சமூக நல அதிகாரி லலிதா யாதவ், ’விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த திட்டத்தின்கீழ், ஜோடிகளின் ஆதார் அட்டைகள் சரியாக இருக்கின்றனவா என்று சரிபார்க்கப்படும். பிற விசயங்களும் ஆய்வு செய்யப்படும். ஆனால், இந்த விசயத்தில் அது சரிவர மேற்கொள்ளப்படவில்லை’ எனத் தெரிவித்துள்ளார்.

model image

இதனைத் தொடர்ந்து, குஷியின் குடும்பத்தினருக்கு வழங்கிய அனைத்துப் பொருட்களும் திரும்ப பெறப்பட்டு உள்ளன என அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்தத் திருமண திட்டத்தின்கீழ் திருமணம் செய்துகொள்ளும் ஜோடிக்கு ரூ.51 ஆயிரம் வழங்கப்படும். அவற்றில், ரூ.35 ஆயிரம் நேரடியாக மணமகளின் வங்கிக் கணக்கிற்குச் சென்றுவிடும். அந்த ஜோடிக்கு பரிசுப் பொருட்களாகக் கொடுப்பதற்காக ரூ.10 ஆயிரம் பணமும், திருமண நிகழ்ச்சி செலவுக்காக ரூ.6 ஆயிரம் பணமும் ஒதுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: முதலிரவு குறித்த கேள்வி: டி.வி. நேரலையில் காமெடி நடிகரைத் தாக்கிய பிரபல பாகிஸ்தான் பாடகி!

முன்னதாக, இந்த சமூக திருமண திட்டத்தின் மூலம் மோசடியில் ஈடுபட்டதாக இரு அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 15 பேர் கைது செய்யப்பட்டனர். உத்தரப் பிரதேசத்தில் உள்ள பாலியா மாவட்டத்தில் ஜனவரி 25 ஆம் தேதி சமூகத் திருமண திட்டத்தின் கீழ் திருமண நிகழ்வு நடைபெற்ற நிகழ்வில் 568 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்த நிலையில், மணமக்களாக காட்டிக்கொள்வதற்கு பலருக்கும் பணம் கொடுக்கப்பட்டதும் கண்டறியப்பட்டது.

மணமக்களாக தங்களைக் காட்டிக்கொள்ள ரூ.500 முதல் ரூ.2000 வரை பணம் கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட இந்நிகழ்வில், பாஜக எம்.எல்.ஏ கேத்கி சிங் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.