இந்தியா

உன்னாவ் பெண், விபத்தில் சிக்கிய விவகாரம்: சிபிஐ விசாரணை கோருகிறார் அகிலேஷ்!

உன்னாவ் பெண், விபத்தில் சிக்கிய விவகாரம்: சிபிஐ விசாரணை கோருகிறார் அகிலேஷ்!

webteam

பாஜக எம்.எல்.ஏ மீது பாலியல் புகார் கூறிய பெண், விபத்தில் சிக்கிய விவகாரத்தில் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சியின் எம்.பி. அகிலேஷ் யாதவ் தெரிவித்தார். 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உன்னாவ் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சாகர் மீது பாலியல் புகார் கூறினார். அதாவது அப்பெண் 16 வயதாக இருந்தப் போது வேலை குறித்து கேட்க, சென்றபோது, அவரை எம்.எல்.ஏ குல்தீப், பாலியல் வன்கொடுமை செய்ததாக அப்பெண் புகாரில் தெரிவித்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் சரியான நடவடிக்கை எடுக்காதததால் அப்பெண் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் வீட்டின் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.


இதையடுத்து அந்த எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டார். பின்னர் காவல்நிலையத்தில் விசாரணைக்கு சென்ற அவரது தந்தை இறந்தார். அதற்கு சாட்சியாக இருந்தவரும் மர்மமான முறையில் இறந்தார். இந்நிலையில் அம்மா மற்றும் அத்தையின் பாதுகாப்பில் வாழ்ந்து வந்த அந்தப் பெண், தனது தாய், வழக்கறிஞர் மற்றும் உறவினருடன் காரில் ரேபரேலி-க்கு நேற்று சென்று கொண்டிருந்தார். அப்போது அவரின் கார் மீது லாரி ஒன்று மோதியது. இந்த விபத்தில் அப்பெண்ணின் தாய் மற்றும் உறவினர் உயிரிழந்தனர். மேலும் அப்பெண்ணும் வழக்கறிஞரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகின்றனர். 


இந்த வழக்கில் தொடர்ந்து இறப்புகள் நடந்துவருவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில் சமாஜ்வாதி கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான அகிலேஷ் யாதவ், ‘’இது தொடர்பாக, சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை வைத்துள்ளோம். இந்த விவகாரத்தை மக்களவையில் எழுப்புவேன். மாநிலங்களவை உறுப்பினர்களும் இந்த விவகாரத்தை எழுப்புவார்கள்’’ என்றார்.