வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தை இழந்த சூரல்மலையை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஸ்ருதிக்கு வயநாடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறையில் எழுத்தராக அரசுப்பணி வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஸ்ருதிக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், அவரது மறுவாழ்விற்கு துணை நிற்பதாகவும் கேரள அரசு தெரிவித்துள்ளது. வயநாடு நிலச்சரிவில், தாய், தந்தை, இளைய சகோதரி, சித்தி, சித்தப்பா என குடும்ப உறுப்பினர்கள் 9 பேரை பறிகொடுத்தவர் ஸ்ருதி. இத்தனை பெரிய இழப்பை சந்தித்த ஸ்ருதிக்கு ஆறுதலாய் உடனிருந்து தேற்றியவர் அவரது காதலன் ஜென்சன்.
உயிரிழந்தவர்களுக்கு சடங்கு செய்வதற்காக 40 நாட்கள் கழித்து தந்தை வழிப்பாட்டி உள்ளிட்ட உறவினர்களுடன் கல்பெட்டா அருகே கோவிலுக்கு சென்று திரும்பிய போது நடந்த விபத்தில் ஜென்சன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையறிந்த கேரள முதல்வர் பினராயி விஜயன், ஸ்ருதிக்கு அரசு வேலை வழங்கப்படும் என அப்போதே அறிவித்தார். காலில் நடந்த அறுவை சிகிச்சையால் ஓய்விலிருந்த ஸ்ருதி தற்போது ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் முன்னிலையில் அரசுப்பணியில் சேர்ந்துள்ள புகைப்படங்கள் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றன.