உலகின் மிகப்பெரிய பொதுமக்கள் கூடும் நிகழ்வான, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 26 வரை நடைபெற்றது. 40 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்வில், உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் படையெடுத்தனர். 65 கோடிக்கும் கூடுதலான பக்தர்கள் கும்பமேளாவில் பங்கேற்று புனித நீராடியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, திரிவேணி சங்கமத்தில் அதிகளவு பாக்டீரியா இருப்பதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வுகள் தெரிவித்தன. பிரயாக்ராஜில் வெவ்வேறு இடங்களில் ஆற்று நீரை பரிசோதனைக்கு உட்படுத்தியதில் அந்த நீரானது, மனிதர்கள் குளிப்பதற்கு உகந்த தரத்தில் இல்லை எனத் தெரிய வந்துள்ளதாக தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை சமர்ப்பித்தது.
கோடிக்கணக்கானோர் நீராடியதால் மனிதக் கழிவுகள் அதிகளவில் ஆற்று நீரில் கலந்திருப்பதாகவும், இதன் காரணமாக அவற்றின் வழியே பரவும் ‘ஃபீக்கல் கோலிஃபார்ம்’ நுண்ணுயிரிகளால் நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதனை சுட்டிக்காட்டி உடனடியாக நடவடிக்கை எடுக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அத்துடன் விரிவான அறிக்கை அளிக்கவும் உத்தரப் பிரதேச மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு ஆணையிட்டது. எனினும், இந்தக் கூற்றை உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் மறுத்திருந்தார்.
இந்த நிலையில், பீகார் மாநிலத்தின் பல்வேறு இடங்களில், கங்கை நதி நீர் குளிப்பதற்கு தகுதியற்ற நிலையில் உள்ளதாக, அம்மாநில பொருளாதார ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. FAECAL COLIFORM மற்றும் டோட்டால் கோலிபார்ம் ஆகிய பாக்ட்ரீயாக்கள் அதிகளவில் இருப்பதே இதற்கு காரணமென, அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. FAECAL COLIFORM என்பது, மனிதர்கள் மற்றும் விலங்குகளில் மலக்குடல் பகுதியில் உருவாகும் பாக்டீரியாக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கங்கை நதிக்கரை நகரங்களிலிருந்து கழிவு நீர் நதியில் வெளியேற்றப்படுவதே, FAECAL COLIFORM மற்றும் டோட்டால் கோலிபார்ம் ஆகியவை அதிகம் இருப்பதற்கு முக்கிய காரணம் எனவும், பீஹார் பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.