இந்தியா

கரும்பலகைகளாக மாறிய வீடுகளின் சுவர்கள் - ஜார்கண்ட் ஆசிரியர்களின் அசத்தல் முயற்சி

webteam

ஜார்கண்ட் மாநிலத்தில் குழந்தைகளின் வீட்டுச்சுவரில் கரும்பலகைகளை பொருத்தி ஆசிரியர்கள்  பாடங்களை நடத்தி வருவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து சுமார் 40கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ளது டுமார்த்தர் கிராமம். பழங்குடி இன மக்கள் வாழ்ந்து வரும் இப்பகுதியில் செல்போன் வசதியோ, ஆன்லைன் வசதியோ கிடையாது. இதனால் அங்கு வசித்து வந்த 290 மாணவர்கள் முறையான கல்வி கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர். இதனையறிந்த தலைமை ஆசிரியர் பத்ரலேக், குழந்தைகளின் இருப்பிடத்திற்கே சென்று ஒரு நடுநிலைப் பள்ளியையே உருவாக்கி விட்டார்.

ஆம், குழந்தைகளின் பாதுகாப்பிற்காக, வீட்டுச்சுவரில் தனி தனி கரும்பலகைகளை உருவாக்கிய அவர், அங்கு குழந்தைகளை சமூக இடைவெளியுடன் அமர வைத்தார். பத்ரலேக் உட்பட 4 ஆசிரியர்கள் சுழற்சி முறையில் குழந்தைகளுக்கான பாடங்களை எடுத்து வருகின்றனர். பள்ளிக்குச் செல்வது போல சீருடை அணிந்து கல்வி கற்க வரும் குழந்தைகள் ஆர்வமுடன் பாடங்களை பயில்கின்றனர்.

இது குறித்து தலைமை ஆசிரியர் பத்ரலேக் கூறும் போது “ டுமார்த்தர் கிராமம் மிகவும் பின் தங்கியப்பகுதி. அங்கு செல்போன் வசதியோ, ஆன்லைன் வசதியோ கிடையாது. அதனால் மாணவர்களின் நலன் கருதி அவர்கள் இருக்கும் இடத்திற்கேச் சென்று பாடங்களை எடுத்து வருகிறோம். மாணவர்களிடையே சமூக இடைவெளியை ஏற்படுத்த, வீட்டுச் சுவரில் ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியாக கரும்பலைகளை அமைத்து அவர்களது கைகளில் சாக்குக்கட்டிகளையும் கொடுத்துள்ளோம். 

ஐம்பது ஐம்பது மாணவர்களாக வரவைத்து ஐம்பது மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என சுழற்சி முறையில் பாடங்களை எடுத்து வருகிறோம். மாணவர்கள் தங்களுக்கான சந்தேகங்களை அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கரும்பலகையில் எழுதி காண்பிக்கும் போது,

ஆசிரியருக்கான கரும்பலகையில் அவர்களின் சந்தேகத்திற்கான பதில்கள் கொடுக்கப்படும். இந்த வித்தியாசமான முயற்சி மாணவர்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளது. இதற்கான முழு பாராட்டும் துணை ஆணையரையேச் சாரும்.” என்றார்.