இந்தியா

தி காஷ்மீர் ஃபைல்ஸ்: “தவறு என்று நிரூபித்தால் படம் இயக்குவதை விட்டு விடுகிறேன்” -இயக்குநர்

சங்கீதா

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் குறித்து இஸ்ரேல் இயக்குநர் நடாப் லாபிட்டின் கருத்துக்கு, அப்படத்தின் இயக்குநர் விவேக் அக்னி ஹோத்ரி பதிலடி தந்துள்ளார்.

கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில், தேர்வுக் குழுத் தலைவர் நடாவ் லாபிட் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் குறித்து விமர்சனம் செய்திருந்தார். இதற்கு எதிர்ப்பும், ஆதரவும் தெரிவிக்கப்பட்டு வரும்நிலையில், படத்தின் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி, காலையிலேயே ட்வீட் ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவில், “உண்மை மிகவும் ஆபத்தானது. சில நேரங்களில் அது மக்களைப் பொய் சொல்லவும் தூண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை இயக்குநர் விவேக் அக்னி ஹோத்ரி வெளியிட்டுள்ளார். அதில், "இதெல்லாம் எனக்குப் புதிதல்ல. ஏனெனில் இதுபோன்ற வார்த்தைகள் ஏற்கெனவே பயங்கரவாத அமைப்புகளாலும் நகர்ப்புற நக்சல்களாலும், இந்தியாவை பகுதி பகுதியாக பிரிக்கும் நோக்கம் கொண்ட ஆதரவாளர்களாலும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்திய அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சியி மேடையில், இவ்வாறு பேசியது ஆச்சரியமாக உள்ளது. எப்போதுமே இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாடுகள் எடுக்கும் இவர்கள் யார்?.

கூட்டுப் பாலியல் வன்முறை செய்யப்பட்ட, கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் என சுமார் 700 பேரிடம் நேர்காணல் செய்த பின்னர்தான் இந்தப்படத்தை எடுத்தோம்.

நகர்ப்புற நக்சல்கள் மற்றும் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' குறித்துப் பேசிய நடாவ் லாபிட் போன்றோர் இந்தப்படத்தில் வரும் காட்சிகள் மற்றும் உரையாடல்களில் ஏதேனும் தவறு இருந்தால் அதை நிரூபிக்க நான் அவர்களுக்குச் சவால் விடுகிறேன். அப்படி அவர்கள் நிரூபித்தால், நான் படம் இயக்குவதை விட்டுவிடுகிறேன்" என்று வீடியோவில் சவால் விடுத்துள்ளார்.