இந்தியா

உடலின் மீதேறி ஒய்யாரமாக படமெடுத்து நின்ற நாகப்பாம்பு..அசையாமல் கட்டிலில் படுத்திருந்த பெண்

JananiGovindhan

பாம்பு என்றதுமே படையே நடுங்கும் என்ற சொற்றொடர்தான் பாம்பு தொடர்பான வீடியோக்கள் சமூல வலைதளங்களில் பார்க்கும் போது நினைக்க வைக்கும். ஆனால் வயலில் வேலை பார்த்து முடித்துவிட்டு ஆசுவாசமாக படுத்திருக்கும் பெண்ணின் முதுகின் மீது ஒரு நாகப்பாம்பு ஒன்று தலையை தூக்கி படமெடுத்து நின்றிருந்த காணொலி காண்போரின் விழியை பிதுங்கச் செய்திருக்கிறது.

கர்நாடகாவின் கல்புர்கி அருகே உள்ள மல்லபா கிராமத்தில்தான் இந்த சம்பவம் அரங்கேறியிருக்கிறது. பங்கம்மா ஹனமந்தா என்ற பெண் தனது விவசாய வேலைகளை முடித்துவிட்டு வயல்வெளியில் உள்ள மரத்தின் கீழ் படுத்திருந்திருக்கிறார்.

அப்போது அவ்வழியே வந்த நாகப்பாம்பு ஒன்று பங்கம்மாவின் பின்புறமாக ஏறி தலையின் மீது தனது தலையை தூக்கியவாறு ஏறி நின்றிருக்கிறது. இதனையறிந்ததும் எந்த தயக்கமும் காட்டாது கண்ணை மூடி ஸ்ரீசைல மல்லையா என பங்கம்மா வணங்க தொடங்கியிருக்கிறார்.

இதனிடையே பெண்ணின் மீது பாம்பு ஏறி நின்றதை அறிந்த அப்பகுதி மக்கள் சம்பவம் நடந்த இடத்தில் சூழ்ந்து வீடியோ எடுத்திருக்கிறார்கள். ஆனால் பாம்பின் பிடியில் இருந்த அப்பெண்ணோ பயத்தை வெளிக்காட்டாமல் கொஞ்சம் கூட நகராமல் எப்படி படுத்திருந்தாரோ அப்படியே கிடந்திருக்கிறார்.

கிட்டத்தட்ட ஒரு மணிநேரமாக பங்கம்மாவின் முதுகின் மீது ஏறி பாம்பு கிடந்துள்ளதாக கர்நாடக செய்தி நிறுவனங்கள் மூலம் அறிய முடிகிறது. கூட்டம் அதிகமாகவே அப்பாம்பு பங்கம்மாவுக்கு எந்த பங்கமும் வரவிடாமல் அமைதியாக இறங்கிச் சென்றிருக்கிறது. இது தொடர்பான வீடியோவை உள்ளூர்வாசிகள் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளதுதான் தற்போது வைரலாகி வருகிறது.