இந்தியா

“என்னை பைத்தியம் என நினைத்தார்கள்” - பாப் பாடல்களை பாடும் விவசாயின் சோகக் கதை..!

webteam

ஆங்கில பாப் பாடல்களை பாடுவதை கேட்டு ஊர்மக்கள் தன்னை பைத்தியம் என நினைத்ததாக ஒரு ஏழை விவசாயி தெரிவித்துள்ளார். இதனிடையே அவரது வீடியோ ஒன்று இப்போது வைரலாக பரவி வருகிறது. 

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் பிரபல பாப் பாடகரான ஜஸ்டின் பீபரின்‌ பாடலை நேர்த்தியாக பாடுகிறார். அதற்கான வீடியோ இணையத்தில் இப்போது கவனம் பெற்றுள்ளது. கனடாவை சேர்ந்த ஜஸ்டின்‌ பீபரின் ஆங்கில ஆல்பங்களுக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவரைப் போலவே ஆங்கில பாப் பாடல்களை இந்த விவசாயி பாடுவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இவர் கர்நாடக மாநிலத்தில் வசித்து வரும் பிரதீப் என்பது தெரியவந்துள்ளது.

வெளி உலகம் அறியாமல் தனது தோட்ட வேலைகளுக்கு இடையே இந்தப் பாடல்களை பாடி வரும் இவரைப் பிரபலமாக்கி இருக்கிறது இன்ஸ்டாகிராமில் அனுபம்கேர் பதிவிட்ட ஒரு பதிவு. அதை பார்த்த நெட்டிசன்கள் இவரை ஒரே நாளில் பிரபலமான மனிதராக மாற்றி உள்ளனர். பிரதீப் பாடல் குறித்து அனுபம்கேர் தனது பதிவில், “இந்த வீடியோ கிடைக்க பெற்றேன். எனவே அதை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன். கர்நாடகாவை சேர்ந்த விவசாயி இவர். இவர் அதிகம் ஆங்கிலம் பேச மாட்டார் என்று நம்புகிறேன். ஆனால் இங்கு அவர் ஜஸ்டின் பீபரின் பாடலை பாடும் விதம் மற்றும் அவரது அணுகுமுறை அவரது திறமைக்கான சான்று. இது எனது இந்தியா. ஜெய் ஹோ” என்று பாராட்டி எழுதி உள்ளார்.

அனுபம் சொன்னதைப்போல பிரதீப் அதிகம் படித்தவர் இல்லை என்பது அவர் ஏஎன்ஏவுக்கு அளித்துள்ள பேட்டி மூலம் தெரியவந்துள்ளது. அதில் பிரதீப், “எனக்கு இசை மட்டுமே தெரியும். ஆங்கில வார்த்தைகள் எனக்குப் புரிவதில்லை. ஆனால் நான் கிரிக்கெட் வர்ணனையை கேட்டு நானே சொந்தமாக ஆங்கிலம் கற்றேன். அதேபோல் செய்திதாள்களை படித்து ஆங்கிலம் கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்து கொண்டு வருகிறேன். நான் பாடுவதை கேட்டு விட்டும் ஊரில் உள்ளவர்கள் என்னைப் பைத்தியம் என நினைத்தார்கள். ஆகவே மனம் உடைந்து போய் தற்கொலைக்கு முயன்றேன். அதற்காக விஷம் அருந்தி தற்கொலை செய்ய போனேன். ஆனால் அதில் இருந்து மீண்டேன். இந்த நாட்டிற்கு நான் ஏதாவது செய்ய வேண்டும் என்பதே என் லட்சியம்” என்கிறார் இந்த விவசாய பாடகர்.

இவரை அந்த ஊரில் சிலர் யூடியூபிற்காக தனியாக பேட்டி எடுத்து வெளியிட்டுள்ளனர். வறண்டு போன வயல்வெளியில் காட்டு வேலை செய்து வரும் பிரதீப், அவர்களின் விருப்பத்தை ஏற்று பாடிக் கொண்டே ஆடியும் இருக்கிறார். அந்த வீடியோக்களும் இப்போது வைரலாக மாரி வருகின்றன. இவரது வீடியோவை அனுபம்கேர் தனது இன்ஸ்டா பகுதியில் எடுத்து வெளியிட்டதன் நிலையில் இன்று இந்திய அளவில் பிரபலமக மாறி இருக்கிறார் இந்த விவசாயி.