இந்தியா

தனது பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய கஃபீல் கான் கோரிக்கை!

தனது பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய கஃபீல் கான் கோரிக்கை!

JustinDurai

தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் உத்தரப்பிரதேசத்தில் இருந்து வெளியேறி, ராஜஸ்தான் செல்வதாக மருத்துவர் கஃபீல் கான் தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக சிறையில் உள்ள உத்தரப்பிரதேச மருத்துவர் கஃபீல் கானை உடனடியாக விடுவிக்க அலகாபாத் உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

குடியுரிமை திருத்தத் சட்டத்திற்கு எதிராக வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசியதாக கஃபீல் கான் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது. ஆனால் கஃபீல் கான் இதுகுறித்து கூறுகையில், ‘’ஆக்சிஜன் சிலிண்டர் சப்ளையின்றி சுமார் 60 குழந்தைகள் உத்தரப்பிரதேசத்தில் மரணமடைந்தது தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்ட என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை என்று நீதிமன்றம் என்னை விடுவித்தது.

இதனால் என்னை எப்படியாவது குற்றச்சாட்டில் இழுத்துவிட்டு சிறையில் தள்ள வேண்டுமென்று மாநில அரசு திட்டமிட்டு செய்து முடித்தது.

உத்தரப்பிரதேச மாநில அரசின் தவறான, ஆதாரமில்லாத, பொய்யாக ஜோடிக்கப்பட்ட வழக்கு அம்பலமாகியுள்ளது. நீதித்துறையின் உத்தரவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். முதல் 5 நாட்கள் சிறையில் எனக்கு உணவு, தண்ணீர் கொடுக்காமல் சித்ரவதை செய்தனர்’’ என்றார்.  

தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் சொந்த ஊரான கோரக்பூருக்கு செல்ல விரும்பவில்லை என்றும் சிறிதுகாலம் குடும்பத்துடன் ராஜஸ்தானில் இருக்க திட்டமிட்டுள்ளதாகவும் கஃபீல் கான் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தனது பணியிடை நீக்கத்தை ரத்து செய்யக்கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.