உத்தரப் பிரதேச மாநிலத்தில் நிவாரணத் தொகைக்காக தங்கள் வீட்டில் உள்ள முதியவர்களை குடும்பத்தினரே புலிக்கு இரையாக அனுப்புவது தெரியவந்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் பிலிப்பிட் புலிகள் காப்பகத்தின் எல்லையில் அமைந்துள்ள கிராமங்களில் புலி தாக்கி கிராம மக்கள் இறந்து வருவது சமீபகாலங்களில் அதிகரித்து வருகிறது. இதற்கான காரணங்கள் குறித்து வன உயிர் குற்றத்தடுப்பு ஆணையம் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அவர்கள் நடத்திய ஆய்வில் இறந்தவர்கள் அனைவரும் முதியவர்கள் என்பது தெரியவந்ததுள்ளது.
இந்நிலையில், அதற்கான காரணங்கள் கண்டறியப்பட்டபோது அம்மாநில அரசு வழங்கும் நிவாரண தொகைக்காக கிராம மக்களே தங்களது குடும்பத்தில் இருக்கும் முதியவர்களை காட்டுக்கு அனுப்புவதும் கண்டுபிடிக்கப்பட்டது. உடல்நிலை சரியில்லாத முதியவர்கள் தாங்களே காட்டிற்கு செல்வதுண்டு. மேலும் முதியவர்களும் தங்களது வருங்கால சந்ததியினருக்காக விருப்பத்துடன் புலிக்கு இரையாக செல்வதும் தெரியவந்துள்ளது. இதுதவிர வீட்டில் இறந்த முதியவர்களின் உடலை காட்டிற்கு கொண்டு சென்று போடுவதும் அதை புலிகள்தான் தாக்கி இறந்ததாகவும் கிராமவாசிகள் நடத்திய நாடகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. முதியவர்கள் முதியோர் இல்லம் தேடி சென்ற காலங்கள் மறைந்து இப்போது காட்டிற்கு சென்று உயிர் விடுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.