இந்தியா

பராமரிக்க முடியாததால் விற்பனைக்கு வரும் மல்லையாவின் குதிரைகள்

பராமரிக்க முடியாததால் விற்பனைக்கு வரும் மல்லையாவின் குதிரைகள்

webteam

நஷ்டத்தை சமாளிக்க வேண்டி மல்லையா வளர்த்து வந்த குதிரைகள் விற்பனை செய்யப்படுவதாக தெரிய வந்துள்ளது.


இந்தியாவை தாண்டி இன்று அதிகம் பேசப்படும் தொழிலதிபர் விஜய் மல்லையா. கடன் பிரச்னைக்களுக்கு பிறகு அவர் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுவிட்டார். தற்போது லண்டனில் இருக்கும் அவரை இந்தியா கொண்டுவர பல்வேறு சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது இந்திய அரசு. அதனையொட்டி சமீபத்தில் அவரை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஆகவே அவர் விரைவில் இந்தியா அழைத்து வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அவர் பெங்களூருவில் நடத்தி வந்த குதிரைப் பண்ணை பல நெருக்கடிகளை சந்தித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கர்நாடக மாநிலம் குனிகல் நகரத்தில் மல்லையாவிற்குச் சொந்தமான குதிரைப் பண்ணை ஒன்று உள்ளது. இந்தப் பண்ணையை அவர் 1988 ஆண்டு முதல் நடத்தி வருவதாக அவரது கம்பெனியான United Racing and Bloodstock Breeders Limited இன் வலைத்தளம் குறிப்பிடுகிறது. மிகப் பெரிய பொருட்செலவில் இவர் நிர்வகிக்க ஆரம்பித்த இந்தப் பண்ணை 1992 ஆம் ஆண்டில் இருந்தே சில பொருளாதார நசிவுகளை சந்தித்து வருவதாக தெரிய வந்துள்ளது. 


இந்தப் பண்ணையில் மொத்தம் 250 முதல் 260 வரையிலான குதிரைகளை வளர்க்க முடியும். அந்தளவுக்கு பரந்து விரிந்திருந்த 
இப்பண்ணையில் இப்போது இருப்பதோ வெறும் 160 குதிரைகள்தான். இந்தப் பண்ணைக்கான நிலத்தை 30 ஆண்டுகள் குத்தகைக்கு மல்லையா கர்நாடக அரசிடம் இருந்து பெற்றிருந்தார். இவரின் வியாபார நஷ்டத்தால் இப்போது இந்தப் பண்ணையும் பாதிக்கப்பட்டுள்ளது. சரியாக இயங்காததால் வருமானம் இன்றி இந்தப் பண்ணை சிக்கலில் உள்ளதாக தெரிகிறது.  


ஆகவே குதிரைகளுக்கு சரியான உணவுகளை வழங்க முடியாமல் தவிக்கின்றனர் இதன் நிர்வாகிகள். அதாவது இப்பண்ணையை நடத்த குறைந்தது ஆண்டிற்கு 10 கோடி வரை செலவாகிறது. இப்போதைய கணக்கின் படி இந்தப் பண்ணை ஆண்டுக்கு மூன்று கோடிக்கு மேல் நஷ்டத்தை சந்திக்கிறது. இங்கே உள்ள குதிரைகளின் மதிப்பு 8 கோடி வரை இருக்கும் என்கிறார்கள். ஆகவே இந்த நஷ்டத்தை ஈடுகட்ட குதிரைகளை நிர்வாகம் விற்க தொடங்கியுள்ளதாக தி பிரிண்ட் செய்தி வெளியிட்டுள்ளது. 

இதுவரை 50 குதிரைகள் விற்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஒரு குரை 10 லட்சம் முதல் 15 லட்சம் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது. மல்லையாவிற்கு குதிரைகள் மீதிருந்த காதலால் இந்தப் பண்ணையை அவர் வாங்கியுள்ளார்.  உலகிலேயே மிகப் பழமையான பண்ணைகளில் இந்தக் குனிகல் குதிரைப் பண்ணையும் ஒன்று. இந்தப் பண்ணையை முதலில் தொடங்கியவர் திப்பு சுல்தான். 18 நூற்றாண்டில் மைசூரை ஆட்சி செய்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தக் காலம் முதல் இந்தக் குனிகல் பண்ணை செயல்பட்டு வருவதால் உலக அளவில் இதன் தரம் அதிகம் அறியப்பட்டுள்ளது. 

ஆனால் இன்றைக்கு ஏற்பட்டுள்ள வருவான வரி பிரச்னையாலும் கடன் தொல்லையாலும் இதன் உரிமையாளரான மல்லையா லண்டன் தப்பிச் சென்ற பிறகு, மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது அவர் ஆசையாசையாக வளர்ந்து வந்த இந்தக் குதிரைகள்தான். 

பந்தயத்தின் மூலம் பெரும் பணம் ஈட்டி தந்த இந்தக் குதிரைப் பண்ணை இப்போது பெரும் சிக்கலை சந்தித்து வருகிறது. அங்கே நிலவும் பெருளாதார நெருக்கடியால் குதிரைகளை பாராமரிப்பத்தில் பெரும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்தப் பண்ணையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் இந்தக் குதிரை விற்பனை செய்யப்படுவது தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்தியை உறுதிப்படுத்தியுள்ளனர்.