இந்தியா

“இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை” - விக்னேஸ்வரன் வலியுறுத்தல்

webteam

இரட்டை குடியுரிமை வழங்கினால் தான் இலங்கை தமிழர்களுக்கு நன்மை கிடைக்கும் என்று இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

வேலூர் தமிழ்ச் சங்கம் சார்பில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “எங்கள் மக்கள் திரும்பவும் இலங்கைக்கு வர வேண்டும் என்பது தான் எங்களுடைய முக்கிய கோரிக்கை. ஆனால் அதே நேரத்தில் 30 வருட காலமாக இங்கே இருந்த தமிழ் மக்கள் பல விதமான சலுகைகளை பெற்றிருக்கிறார்கள். அவர்கள் பிள்ளைகளின் கல்வி சம்மந்தமாக பலவிதமான நன்மைகளை பெற்று வருகிறார்கள்.

அதன் காரணத்தால் இவர்கள் இலங்கை திரும்பும்போது கல்வி வசதிகளை இலவசமாக கொடுப்பதற்கு வசதி செய்து தருவதாக இந்திய அரசு எனது பதவி காலத்தில் கூறியிருந்தது. இப்போது அவர்களுக்கு இரட்டை குடியுரிமை கொடுப்பது பற்றி சிந்திக்கின்றார்கள். இரட்டை குடியுரிமை எங்கள் மக்களுக்கு நன்மை பயக்கும் என்பது தான் என்னுடைய கருத்து.

அதில் சட்ட சிக்கல்கள் சில இருப்பதாக கூறப்படுகிறது. அந்த சட்ட சிக்கல்களுக்கு அப்பால் சென்று இரட்டை குடியுரிமை வழங்குவது தான் நன்மை பயக்கும். ஏனென்றால் அவர்கள் எங்கள் நாட்டிற்கு வந்து வளமான வாழ்வு வாழும் வரையில் இந்தியாவுக்கு வந்து செல்ல வேண்டிய அவசியம் இருக்கும். ஆகையால் கூடுமானவரை இரட்டை குடியுரிமை இவர்களுக்கு வழங்க வேண்டும்” என்றார்.