இந்தியா

காரா? அல்லது காகித கப்பலா? - ஹைதராபாத் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட வாகனங்கள்.!

webteam

வங்கக்கடலில் வலுப்பெற்றிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையைக் கடந்த நிலையில், தெலங்கானாவில் கனமழை கொட்டியது. ஹைதராபாத்தில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன.தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் மட்டும் 2‌ சென்டி மீட்டர் மழை கொட்டியது. இதில் பண்ட்லகுடா, வசந்தாலிபுரம், தம்மைகுடா, முஷீராபாத், டாலி சௌக்கி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்தது.

பல இடங்களில் மழைநீரில் கார் உள்ளிட்ட வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. தீயணைப்பு மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வெள்ள நீர் வேகத்தில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், காகித கப்பல்போல நீரின் போக்கில் போகும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கார், லோடு ஆட்டோ போன்ற கனரக வாகனங்கள் கூட தண்ணீரில் அடித்துச்செல்லப்படும் வீடியோ பார்ப்போரை பதற வைக்கிறது. மழையின் தீவிரத்தை இந்த வீடியோ விளக்குவதாக பலரும் பதிவிட்டு வருகின்றனர்.