இந்தியா

“தூத்துக்குடி ஸ்டெர்லைட்டைத் திறக்க அனுமதியுங்கள்” - பிரதமருக்கு வேதாந்தா தலைவர் கடிதம்

“தூத்துக்குடி ஸ்டெர்லைட்டைத் திறக்க அனுமதியுங்கள்” - பிரதமருக்கு வேதாந்தா தலைவர் கடிதம்

webteam

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பது குறித்து வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்

'பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த நலனுக்காகத் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற தங்களுடைய நியாயமான விண்ணப்பத்தைப் பிரதமர் மோடி ஏற்க வேண்டும்' என்ற கோரிக்கையுடன் வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த 4 ஜூன் 2020 என்ற தேதி குறிப்பிடப்பட்ட அந்தக் கடிதத்தில், கடந்த 20 ஆண்டுகளில் இந்தியா அதிக தாமிரத்தை இறக்குமதி செய்யும் நாடாக இருப்பதை அவர் சுட்டுக்காட்டி உள்ளார்.

மேலும், இந்த ஆலை மூடப்பட்டதால் பல ஆயிர தொழிலாளர்கள் வேலையின்றி இருப்பதாகவும், இது புலம்பெயரும் தொழிலாளர்களை உருவாக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் மத்திய மாநில அரசுகளுக்கு அனைத்து வகையிலும் சுமார் 40ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அகர்வால்,தாமிர இறக்குமதியில் சீனா ஆதிக்கம் செலுத்துவதாகவும், கடந்த 3 ஆண்டுகளில் 400% சீனாவில் இறக்குமதி அதிகரித்துள்ளதாகவும், இதனால் இந்தியாவின் தாமிர சந்தையைச் சீனா கைப்பற்ற முயற்சி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் மற்றும் தெர்மல் பவர் பிளாண்ட், சிறந்த தொழில்நுட்பங்களுடன் கூடிய சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத தொழிற்சாலைகள் என்றும், இவை இந்தியாவிற்கான கிரீடத்தின் முக்கிய ஆபரணமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்