இந்தியா

ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே ராஜினாமா

ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே ராஜினாமா

webteam

ராஜஸ்தானில் கடந்த முறை 163 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்ற பாஜக இந்த முறை தோல்வியை தழுவியது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே பதவியை ராஜினாமா செய்துள்ளார் 

ராஜஸ்தானில் நடைபெற்ற 200 தொகுதிகளுக்கான தேர்தல்களில் காங்கிரஸ் இதுவரை 96 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை நிலைநாட்டியுள்ளது. ராஜஸ்தானை பொருத்த வரை வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில் ஜாதி ஓட்டு வங்கிகளுக்கு முக்கிய பங்கு உள்ளது. அங்கு உள்ள 200 தொகுதிகளில், 65 தொகுதிகளில் பட்டியலினத்தவர்களே ‌அதிகம். அதாவது மொத்த வாக்காளர்களில் 31 சதவிகிதம் பேர் பட்டியலினத்தவர்கள். 

இந்நிலையில் பாரதிய ஜனதா மீது கடந்த சில ஆண்டுகளாகவே பட்டியலினத்தவர்கள் அதிருப்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மாட்டிறைச்சி விவகாரம் தான் அதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. வேலைவாய்ப்பு இல்லாமை, பண மதிப்பிழப்பு பாதிப்புகளும் இந்தத் தேர்தலில் வலுவாக எதிரொலித்ததாகவும் கூறப்படுகிறது. போதாக்குறைக்கு முதலமைச்சர் வசுந்தர ராஜே, மக்களால் எளிதில் அணுக முடியாத நபராக இருந்தார் என்ற புகாரும் பரவலாக இருந்து வந்தது. 

அமைச்சர்கள் கூட முதல்வரை எளிதில் சந்திக்க முடியாது என்ற நிலை இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் வசுந்தரா ராஜே தலைமையை விரும்பாத அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் சிலர் காங்கிரஸ் கட்சிக்கு தாவினார்கள். இது போன்ற காரணங்களே இந்தத் தேர்தலில் பாரதிய ஜனதாவின் பின்னடைவுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. அதே சமயம் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவதற்கு இளம் தலைவர் சச்சின் பைலட்டின் பரப்புரை யுக்தி தான் முக்கிய காரணமாக இருந்ததாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 

முன்னாள்‌ முதல்வரும் மூத்த தலைவருமான அசோக் கெலாட்டுக்கும், இளம் தலைவரான சச்சின் பைலட்டுக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்த நிலையில் அதை ராகுல் காந்தி தலையிட்டு சமரசம் செய்து வைத்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து ராஜஸ்தானில் காங்கிரஸின் தேர்தல் பணிகள் வேகம் எடுக்க தொடங்கின. 

தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு ஓராண்டுக்கு முன்பிருந்தே, மாநிலம் முழுவதும் சச்சின் பைலட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்காளர்களை சந்தித்துள்ளார். குறிப்பாக பட்டியலினத்தவர்கள், பிற்படுத்தப்பட்ட‌ மக்களை சச்சின் பைலட் அதிக அளவில் சந்தித்து தங்கள் பக்கம் ஈர்த்துள்ளார். அதனால் இந்தத் தேர்தலில் காங்கி‌ரஸ் கட்சிக்கு பட்டியலினத்தவர்களின் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் வந்து சேர்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

பாஜகவின் தோல்வியை அடுத்து ராஜஸ்தான் மாநில முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் வசுந்தரா ராஜே. ராஜினாமாவுக்குப் பின் பேசிய அவர், ராஜஸ்தானில் வெற்றி பெற்ற காங்கிரசுக்கு வாழ்த்துகள்; கடந்த 5 ஆண்டுகளில் பாஜக அரசு அதிகளவில் பணிகளை மேற்கொண்டுள்ளது. ராஜஸ்தானில் அடுத்து ஆட்சியமைக்கும் கட்சியும் வளர்ச்சி பணிகளை தொடரும் என நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்