உத்தரப்பிரதேச மாநிலம் சந்தோலி மாவட்டத்தில் உள்ள ஹமித்பூர் கிராமத்தில் கடந்த டிசம்பர் 22 அன்று இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தின்படி, மெஹ்தாப் என்ற இளைஞருக்கும் அங்குள்ள பெண் ஒருவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. பின் சம்பத்தன்று (டிச 22), திருமணத்துக்கு முந்தைய இரவு நிகழ்ச்சியில் சாப்பிடும்போது ரொட்டிகள் சுட்டு வழங்க தாமதமானதாகக் கூறி மணமகன் மெஹ்தாப் மற்றும் அவரது உறவினர்கள் திருமணத்தையே நிறுத்திவிட்டு அங்கிருந்து வெளியேறி உள்ளனர்.
அவர்களை தடுக்க மணமகள் வீட்டார் முயன்றபோதும் அவர்கள் விடாப்பிடியாக அங்கிருந்து வெளியேறினர். அதன்பின் அந்த மணமகன் உடனே தனது உறவினரின் பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இதனை அறிந்த மணமகளின் குடும்பத்தினர் உள்ளூர் போலீசில் புகார் அளித்துள்ளனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படாததால் டிசம்பர் 24ஆம் தேதி காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர். அவர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். திருமணத்திற்காக ரூ.7 லட்சம் செலவிட்டதாகவும், அதில் ரூ.1.5 லட்சம் வரதட்சணையாக மணமகன் வீட்டிற்கு அனுப்பப்பட்டதாகவும் மணமகள் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, இதே உத்தரப்பிரதேசத்தில் கடந்த ஜூலை மாதம் பெண் வீட்டார் பரிமாறிய உணவில் அசைவம் (மீன் மற்றும் இறைச்சி) இல்லை எனக் கூறி மணமகன் வீட்டாருக்கும் பெண் வீட்டாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு திருமணம் நின்றுபோனது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கடந்த ஆண்டு தெலங்கானாவில் பெண் வீட்டார் பரிமாறிய உணவில் ஆட்டுக்கிடா எலும்பு இல்லை எனக் கூறி மணமகன் வீட்டார் திருமணத்தை நிறுத்தியது பேசுபொருளானது.
அதே ஆண்டில், கர்நாடகா குடகு மாவட்டத்தில் நடைபெற்ற திருமணம் ஒன்றில், சாப்பாட்டு இலையில் இனிப்பு வைக்கவில்லை என மணமகன் சண்டை போட்ட விவகாரம் பேசுபொருளானதுடன், அந்த திருமணமும் நின்றுபோனது. முன்னதாக, இதேபோல் கடந்த 2017ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகரில் நடைபெற்ற திருமணத்தின்போதும் அசைவ உணவு பரிமாறப்படவில்லை என மணமகன் குற்றஞ்சாட்டியதால் அந்த திருமணமும் நின்றுபோனது குறிப்பிடத்தக்கது