இந்தியா

ஓடும் ரயிலில் 3 சிறுமிகளை தூக்கி வீசிய உறவினர்: ஒரு சிறுமி பலி

webteam

உத்தரப் பிரதேசத்தில் உள்ள சீதாப்பூர் மாவட்டத்தில் ஓடும் ரயிலில் இருந்து உறவினரால் தூக்கி வீசப்பட்ட 3 சிறுமிகளில், ஒருவர் உயிரிழந்தார்.

உத்தரப் பிரதேசம் லக்னோவில் இருந்து 90 கி.மீ. தொலைவில் உள்ள சீதாப்பூர் ரயில் பாதையில் சிறுமி ஒருவரின் உடல் கிடப்பதை, ரயில்வே அதிகாரி ஒருவர் கண்டுள்ளார். அந்த சிறுமியை மீட்டு ரயில்வே போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் சிறுமி இறந்து விட்டதும், அவரது பெயர் முனியா என்பதும் தெரியவந்துள்ளது. அங்கிருந்து 50 கி.மீ. தொலைவில் அல்குன் கதூன் மற்றும் ஷமிம் என்ற இரு சிறுமிகள் தண்டவாளத்தில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் இறந்த சிறுமி முனியாவின், சகோதரிகள் ஆவர். இவர்களில் அல்குனிற்கு இடுப்பெழும்பிலும், கைகளிலும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. ஷமிம் என்ற சிறுமிக்கு மண்டை ஓட்டில் விறிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் அல்குன் 9 வயது, முனியா 7 வயது, ஷமிம் 4 வயது நிரம்பியவர்கள்.

இந்த மூன்று சிறுமிகளும் தங்கள் மாமாவுடன் ரயிலில் வந்து கொண்டிருக்கும்போது, 3 சிறுமிகளையும் அவர் ஓடும் ரயிலில் இருந்து தூக்கி வீசியுள்ளார் என்பது போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அத்துடன் வறுமையின் காரணமாக அந்த சிறுமிகளை கொல்ல அவர்களின் குடும்பத்தினர் முயற்சித்துள்ளதும், மகன்களை சொத்தாகவும், மகள்களை பாரமாகவும் எண்ணுகிற குடும்பமாக அவர்கள் இருந்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், பீகாரில் உள்ள அந்த குடும்பத்தை தேடி வருகின்றனர்.