முக்தர் அன்சாரி
முக்தர் அன்சாரி ட்விட்டர்
இந்தியா

உபியின் காட்ஃபாதர்: பிரபல கேங்ஸ்டர் முக்தர் அன்சாரி சிறையில் திடீர் மரணம்.. பதற்றத்தில் மாநிலம்!

Prakash J

பிரபல தாதாவாக இருந்து அரசியல்வாதியாக மாறிய முக்தர் அன்சாரியின் மரணம், உத்தரப்பிரதேச மாநிலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அவருடைய மறைவு காரணமாக பண்டா, மவு, காசிப்பூர், ஜான்பூர் வாரணாசி ஆகிய மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரபல தாதாவும் அரசியல்வாதியுமான முக்தர் அன்சாரி மரணம்

உத்தரப்பிரதேச மாநிலம் மவு சதார் தொகுதியில் இருந்து 5 முறை எம்.எல்.ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் முக்தர் அன்சாரி. எனினும் இவர்மீது பல்வேறு கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 2022 முதல் 8 வழக்குகளில் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் பாண்டா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்தச் சூழலில் சிறையில் மயங்கிய நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அவர், அதன்பிறகு மாரடைப்பால் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், அவருக்கு ஸ்லோ பாய்சன் கொடுத்துக் கொல்லப்பட்டிருப்பதாக அவரது குடும்பத்தினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, முக்தார் அன்சாரி தங்களிடம் தெரிவித்ததாக அவர்கள் கூறியிருந்தனர். ஆனால் சிறைத்துறை அதிகாரிகள் இதை மறுத்துள்ளனர். எனினும், முக்தாரின் மர்ம மரணம் குறித்து அவரது குடும்பத்தினர் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளனர். முன்னதாக, முக்தார் அன்சாரியின் மரணம் குறித்து 3 பேர் கொண்ட குழு மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தும் என தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க: பாஜகவில் இணைந்த கருணாஸ் படநடிகை: அமராவதியில் மீண்டும் போட்டி..வலுக்கும்எதிர்ப்பு! நவ்நீத் ராணா யார்?

முக்தர் அன்சாரி மரணம்: நியாயமான விசாரணைக்குக் கோரிக்கை

முக்தர் அன்சாரி மரணம் குறித்து பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, ”முக்தார் அன்சாரி சிறையில் உயிரிழந்தது தொடர்பாக அவரது குடும்பத்தினர் முன்வைத்துள்ள கடுமையான குற்றச்சாட்டுகள் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும்” எனத் தன்னுடைய எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

முக்தர் அன்சாரியின் மரணம் குறித்து ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி, "மாநிலத்தில் சட்ட ஆட்சி நடைபெறவில்லை. துப்பாக்கி ஆட்சி நடைபெறுகிறது. முக்தார் அன்சாரி விவகாரத்தில், உ.பி. அரசு பாரபட்சமற்ற விசாரணையை நடத்தும் என நம்புகிறேன். என்ன நடந்தது என்பதை உலகம் முழுவதும் அறிய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸின் சமூக ஊடகப் பிரிவின் தலைவரான பன்குரி பதக், ”காவலில் இருப்பவர்கள் மரணம் அடைவதில் உத்தரப் பிரதேசம் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

பாஜக தலைவர் சித்தார்த் நாத் சிங், "முக்தர் அன்சாரி மீது கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன, நீதிமன்றம்கூட அவருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது. அவருக்கு ஏன் இவ்வளவு ஆதரவு” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மறைந்த பிரிட்டிஷ் எழுத்தாளரும் வரலாற்றாசிரியருமான பேட்ரிக் பிரெஞ்ச் தனது 'இந்தியா: எ போர்ட்ரெய்ட்' புத்தகத்தில், முக்தர் அன்சாரியை, ”உத்தரப்பிரதேசத்தில் மிகவும் பிரபலமான காட்ஃபாதர்களில் ஒருவர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: ”இது சட்டவிரோதமானது” - ரூ.1,800 கோடி அபராதம்.. காங்கிரஸுக்கு மேலும்மேலும் அடி தரும் வருமானவரி துறை!