இந்தியா

6 வயது சிறுமி வன்கொடுமை : தற்கொலை கடிதம் எழுதி திசைதிருப்ப முயன்ற கொடூரன் கைது

webteam

வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை இருசக்கர வாகனத்தில் தூக்கிச்சென்று பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன் உத்தரப்பிரதேசத்தில் பிடிபட்டான்.

மேற்கு உத்தப்பிரதேசத்தின் ஹபுர் பகுதியில் வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த 6 வயது சிறுமியை, கடந்த சில நாட்களுக்கு முன்னர் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் தூக்கிச் சென்றார். இதையடுத்து குழந்தையை காணவில்லை என பதறிய பெற்றோர், காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அக்கம்பக்கத்தினர் மற்றும் இருசக்கர வாகனத்தை நோட்டமிட்ட சிலர் கூறிய தகவல்களின் அடிப்படையில், குழந்தையை கடத்திச் சென்ற நபரின் புகைப்படத்தை வரைந்து போலீஸார் வெளியிட்டனர்.

அத்துடன் வரைபடத்தில் இருக்கும் நபர் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அடுத்த நாள் காலை ஊருக்கு வெளிப்புறத்தில் இருந்த புதரின் அருகே குழந்தை கண்டெடுக்கப்பட்டது. படுகாயத்துடன் மீட்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவ பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியாகியது.

இதையடுத்து குற்றவாளியை வலைவீசி தேடி வந்த போலீஸார், கார்க் முக்தேஷ்வர் பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது ஆற்றின் அருகே தற்கொலை கடிதம் ஒன்று கிடைத்தது. அதில் தான் போலீஸாரின் என்கவுன்ட்டரில் இறக்கவில்லை எனவும், தானே தற்கொலை செய்துகொள்வதாகவும், சிறுமியை கடத்தியது நான் தான் எனவும் எழுதப்பட்டிருந்தது. இந்த கடிதத்தின்மீது சந்தேகம் கொண்ட போலீஸார் குற்றவாளியை தொடர்ந்து தேடினர். அப்போது அதே பகுதியில் பதுங்கியிருந்த குற்றவாளியை மடக்கிப் பிடித்தனர். அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.