இந்தியா

மகளின் கண் முன்னே தாய்க்கு நேர்ந்த கொடுமை : குற்றவாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு

webteam

உத்தரப்பிரதேசத்தில் அழகு நிலையத்தில் இருந்து வெளியே வந்த தாய் மற்றும் மகளை 6 பேர் கொண்ட கும்பல் இரக்கமின்றி தாக்கியுள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் தனது மகளுடன் தாய் ஒருவர் அழகு நிலையம் வந்துள்ளார். அவரை தாக்குதவற்கு திட்டமிட்டு, 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று இருசக்கர வாகனத்தில் தயாராக இருந்துள்ளது. அழகு நிலையத்தில் இருந்து வெளியே வந்த தாய் மற்றும் மகள், தங்கள் வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது அந்தக் கும்பல் இருசக்கர வாகனத்தில், கையில் ஹாக்கி பேட்டுகளுடன் கூச்சலிட்டு வந்துள்ளனர்.

அவர்களைக் கண்டதும், தனது மகளை அழைத்துக்கொண்டு அப்பெண் ஓட்டம் பிடித்துள்ளார். ஆனால் அதற்குள் அந்தக் கும்பல் அவர்களை மடக்கிப்பிடித்து அடிக்கத் தொடங்கியுள்ளது. தாய் தாக்கப்படுவதைக் கண்டு மகள் சத்தம் போட்டு கதறியுள்ளார். ஆனால் மகளை தாக்கி தள்ளிவிட்ட அக்கும்பல், ஹாக்கி பேட்டால் தாயை சரமாரியாக தாக்கியுள்ளனர். மகளின் கண் முன்னே தாய்க்கு நேர்ந்த இக்கொடுமை தொடர்பாக, லக்னோ காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய லக்னோ காவல் கண்காணிப்பாளர் சக்ரேஸ் மிஸ்ரா, “அந்தப் பெண் சிலரின் பெயரை குறிப்பிட்டுக் கூறியுள்ளார். அவர்களை பிடித்து விசாரித்தால் உண்மை தெரியவரும். அப்பெண் அளித்த தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றார். தாக்கப்பட்ட பெண் கூறுகையில், “எங்களுக்கு 3 பேருடன் பிரச்னை உள்ளது. அவர்கள் கடந்த என் மீது ஏற்கனவே பொய்யான திருட்டு புகார் ஒன்றை பதிவுசெய்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் தான் என்னை தாக்கியிருக்க வேண்டும்” என்று குற்றம்சாட்டினார். தற்போது தாய் மற்றும் மகள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.