இந்தியா

”வேலை வேண்டாம்; வாய்ப்பு போதும்”.. டெல்லியை அதிர வைக்கும் UPSC தேர்வர்கள் போராட்டம்!

webteam

UPSC குடிமை பணிகள் தேர்வு (Civil Services Exam) உள்ளிட்ட மத்திய அரசின் ஆட்சேர்ப்புத் தேர்வுகளுக்கு கோவிட்-19  பெருந்தொற்று நெருக்கடியின் போது தங்கள் இறுதி வாய்ப்பினை இழந்தவர்கள் தங்களுக்கு நீதி கேட்டு தலைநகர் டெல்லியில் போராடி வருகின்றனர்.

UPSC குடிமை பணிகள் தேர்வு உள்ளிட்ட ஆட்சேர்ப்புத் தேர்வுகளில் தயாராகி தேர்வெழுதுவதற்கான இறுதி வாய்ப்பை இழந்த அனைவருக்கும் ஒரு முறை நடவடிக்கையாக இழப்பீட்டு மறுவாய்ப்பினை அதற்கான வயதுத்தளர்வுடன் வழங்கிட வேண்டுமென தேர்வர்கள் தொடர்ந்து மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள், சட்டம் மற்றும் நீதிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, அதன் 112வது அறிக்கையில் போட்டித்தேர்வர்களின் கோவிட்-19 பெருந்தொற்று நெருக்கடிகளை கருத்தில் கொண்டு "கோவிட்-19 மாணவர் சமூகமும் மோசமாக பாதிக்கப்பட்டது. கோவிட்-19 முதல் மற்றும் இரண்டாவது கோவிட் அலைகளின் போது மாணவர் சமூகம் எதிர்கொண்ட இன்னல்களை கருத்தில்கொண்டு UPSC குடிமை பணிகள் தேர்வர்களின் கோரிக்கையை அனுதாபத்துடன் பரிசீலித்து, அனைத்து தேர்வர்களுக்கும் வயது தளர்வுடன் கூடிய கூடுதல் வாய்ப்பினை வழங்குமாறு அரசுக்கு இக்குழு பரிந்துரைக்கிறது என கூறியிருந்தது.

UPSC தேர்வைத் தவறவிட்டவர்கள் மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குமாறு அரசை இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தி போராடி வந்த நிலையில் மீண்டும் டெல்லியில் 19ஆம் தேதி முதல் மாணவர்கள் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை நேற்று டெல்லி போலீசார் மிகவும் மோசமான முறையில் தாக்கி அவர்கள் போராட்டத்தை கலைக்கச் செய்ததாக போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள மாணவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதனைப் பற்றி நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் காங்கிரஸ் எம்பி அனுமந்தையா அவர்கள் பேசியுள்ளார். இந்நிலையில் மாணவர்கள் சார்பாக போராட்டம் தொடர்ந்து வருகிறது.