Model image google gemeni
இந்தியா

ரூ.2,000 வரையிலான யுபிஐ பரிவர்த்தனை | கட்டணம் இல்லை.. மத்திய அரசு அறிவிப்பு!

2007ஆம் ஆண்டின் பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு அமைப்புகள் சட்டத்தின்பிரிவு 10 ஏ-யின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Prakash J

2 ஆயிரம் ரூபாய் வரையிலான யுபிஐ பணப்பரிவர்த்தனைகள் மற்றும் ரூபே டெபிட் கார்டுகளுக்கு வங்கிகளோ, சேவை நிறுவனங்களோ எந்தவிதக் கட்டணமும் வசூலிக்கக்
கூடாது என்று மத்திய நிதியமைச்சகம் அரசாணை வெளியிட்டுள்ளது.

நொடிப்பொழுதில் டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை நடப்பதால் சாமானியார்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினர் இடையே யுபிஐ பரிவர்த்தனை முக்கியப் பங்காற்றுகிறது. யுபிஐ பயன்பாடு நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதற்கான சர்வர் பராமரிப்பு செலவுகள், அதிகரித்து வரும் பரிவர்த்தனை அளவுகள் ஆகியவற்றை கையாள வங்கிகளுக்கும், கட்டண சேவை நிறுவனங்களுக்கும் பெரும் செலவாகிறது. இதனால், யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு எம்டிஆர் கட்டணத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என இத்துறையை சேர்ந்த நிறுவனங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன. இந்த நிலையில், ரூ.2000-க்கும் மேற்பட்ட யுபிஐ வணிக பணப் பரிவர்த்தனைகளுக்கு, கூடுதல் கட்டணம் விதிக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகின. இதனால் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டது.

upi

இத்தகைய சூழலில்தான், 2 ஆயிரம் ரூபாய் வரையிலான யுபிஐ பணப்பரிவர்த்தனைகள் மற்றும் ரூபே டெபிட் கார்டுகளுக்கு வங்கிகளோ, சேவை நிறுவனங்களோ எந்தவிதக் கட்டணமும் வசூலிக்கக்கூடாது என்று மத்திய நிதியமைச்சகம் அரசாணை வெளியிட்டுள்ளது. 2007ஆம் ஆண்டின் பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு அமைப்புகள் சட்டத்தின்பிரிவு 10 ஏ-யின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கவும், சில்லறைத் தட்டுப்பாட்டைத் தவிர்க்கவும், காய்கறி,மளிகை, பழ வியாபாரிகள் மற்றும் நுகர்வோரின் சுமையைக் குறைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்பட உள்ளதாகப் பரவி வந்த வதந்திகளுக்கும், பொதுமக்கள் மற்றும் சிறு வியாபாரிகளின் சந்தேகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது