இந்தியா

உறவினரை கட்டி வைத்துவிட்டு இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை!

உறவினரை கட்டி வைத்துவிட்டு இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை!

webteam

உறவினரை மரத்தில் கட்டி வைத்துவிட்டு, அவருடன் வந்த இளம் பெண்ணை, 6 பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் சித்ராகூட் மாவட்டம் மாவ் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர், தனது மைத்துனருடன் உறவினர் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஆறுபேர் அவர்களை வழிமறித்தனர். மைத்துனரை அடித்து உதைத்து மரத்தில் கட்டி வைத்தனர். பின்னர், அவர் முன்பே அந்த இளம் பெண்ணை, ஆறு பேரும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். 

இதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பரப்பினர். இந்த சம்பவம் கடந்த திங்கட்கிழமை நடந்தது. இதுபற்றி வெளியே சொல்லாமல் இருந்த அந்த பெண், கடந்த வெள்ளிக்கிழமை போலீசில் புகார் செய்தார். புகார் கொடுக்க சென்ற போது போலீசார் அவரை திட்டி வெளியே அனுப்பிவிட்டனர். வீடியோ பரவியதை அடுத்து மீண்டும், அவர் மாவட்ட எஸ்பி-யிடம் புகார் செய்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அறிவுறுத்தலின் பேரிலேயே வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த வீடியோவில் இருந்த மூன்று பேரை கைது செய்தனர். அவர்கள், தாங்கள் பாலியல் வன்கொடுமை செய்ததை ஒப்புக்கொண்டதாக சித்ரகூட் எஸ்.பி மனோஜ் ஜா தெரிவித்துள்ளார். மேலும் மூன்று பேரை தேடி வருகின்றனர்.