இந்தியா

சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் - ஒருவர் கைது 

webteam

16 வயது சிறுமியை 3 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து படம் எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் கௌசம்பி மாவட்டத்தில் 16 வயது சிறுமியை மூன்று பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. அத்துடன் அவர்கள் இந்தச் சம்பவத்தை படமாகவும் எடுத்துள்ளதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து இந்த வீடியோ மாவட்டம் முழுவதும் பரவியுள்ளது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் ஒருவரை கிராம மக்கள் கண்டுபிடித்து சரமாரியாக தாக்கியுள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அந்த இளைஞரை மீட்டு வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

இந்த விவகாரம் தொடர்பாக அச் சிறுமி காவல்துறையினருடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், “நான் பக்கத்து கிராமத்திலுள்ள வயலுக்கு சென்று வேலை செய்து கொண்டிருந்த போது என்னை பின்னால் இருந்து மூன்று பேர் தாக்கினர். அதன்பிறகு என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்தனர். அத்துடன் என்னை தனித்தனியாக பாலியல் பலாத்காரம் செய்தனர்” எனத் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து காவல்துறை அதிகாரி சுர்ஜித் பாண்டே, “இந்த வழக்கில் தொடர்புடைய மூவரில் ஒருவரான முகமது நசிம்(20) கைது செய்யப்பட்டுள்ளார். மற்ற இருவரான முகமது சோட்கா மற்றும் பட்கா ஆகியவர்கள் தலைமறைவாக உள்ளனர். இவர்களை தேடி கண்டுபிடிப்பதற்காக ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை பிடிப்போம்” எனக் கூறியுள்ளார்.