இந்தியா

கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து சிறுமி கொலை - அக்காவே திட்டம் தீட்டிய கொடூரம்!

ஜா. ஜாக்சன் சிங்

உத்தரப் பிரதேசத்தில் 13 வயது சிறுமியை 4 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் உள்ள ஒரு கரும்புத் தோட்டத்தில் அதே பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. பிரேதப் பரிசோதனையில், அவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, அந்தப் பகுதியில் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது, கொலை செய்யப்பட்ட சிறுமியின் அக்கா ஸ்வேதாவின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) நடவடிக்கையில் போலீஸாருக்கு சந்தேகம் வந்தது. இதையடுத்து அவரிடம் விசாரித்தபோது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதனைத்தொடர்ந்து, அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸார் விசாரித்தனர். அப்போது அவர் திடுக்கிடும் தகவல்களை கூறினார். அதாவது, அந்தப் பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களுடன் ஸ்வேதா பழகி வந்துள்ளார். பெற்றோர் வேலைக்கு சென்றதும் அந்த இளைஞர்களின் வீட்டுக்குச் செல்வது; அவர்களுடன் தங்குவது போன்ற செயல்களில் அவர் ஈடுபட்டுள்ளார்.

இது ஸ்வேதாவின் தங்கைக்கு (கொலை செய்யப்பட்டவர்) பிடிக்கவில்லை. அவர்களிடம் பழகாதே என பலமுறை கூறியும் ஸ்வேதா அதை கேட்கவில்லை. இதனால் சகோதரிகளுக்குள் அவ்வப்போது சண்டையும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு, அந்த இளைஞர்களுடன் பழகி வருவதை பெற்றோரிடம் கூறப் போவதாக அக்கா ஸ்வேதாவிடம் தங்கை கூறியுள்ளார். இதனால் பயந்துபோன ஸ்வேதா, தனது தங்கையை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். மேலும், தனது நண்பர்களான அந்த இளைஞர்கள் 4 பேரை அழைத்து, இன்று இரவு தனது தங்கையை கொன்றுவிடும் படி கூறியுள்ளார்.

அதன்படி, நேற்று முன்தினம் இரவு இயற்கை உபாதையை கழிக்க வேண்டும் எனக் கூறி தனது தங்கையை ஸ்வேதா அழைத்துச் சென்றிருக்கிறார். கரும்புத் தோட்டம் அருகே சென்ற போது, அங்கிருந்த அந்த 4 இளைஞர்கள் அவரது தங்கையை புதருக்குள் இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர். பின்னர் அவர் அணிந்திருந்த துப்பாட்டாவை வைத்தே அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.

ஸ்வேதாவின் வாக்குமூலத்தை அடுத்து, அந்த இளைஞர்கள் ரஞ்சித் செளஹான், அமர் சிங், அன்கித், சந்தீப் செளஹான் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர். ஸ்வேதாவுக்கு 16 வயது என்பதால் அவரை சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.