இந்தியா

உ.பி: வன்கொடுமையால் கர்ப்பமடைந்த சிறுமிக்கு தீவைத்த குற்றவாளியின் தாய், சகோதரி!

Sinekadhara

15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய இளைஞரின் தாயும் சகோதரியும் சிறுமியை ஏமாற்றிக் கூட்டிச்சென்று தீவைத்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் வன்கொடுமைகள் இந்தியாவில் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக சிறுமிகள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். உத்தரபிரதேசத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு 25 வயது இளைஞர் ஒருவர் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார்.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை சிறுமிக்கு வயிற்றுவலி ஏற்படவே, அவருடைய தாயார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

சனிக்கிழமை சிறுமி கர்ப்பமடைந்த விவகாரம் குறித்து தெரியவந்த குற்றவாளியின் தாயார் மற்றும் சகோதரி, அன்றிரவு அந்த இளைஞருக்கே சிறுமியை திருமணம் செய்துவைப்பதாக ஆசைவார்த்தை கூறி அவர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். சிறுமியும் அதனை நம்பிச் சென்றுள்ளார்.

அங்கு வைத்து சிறுமியின்மீது மண்ணெண்ணெயை ஊற்றி இருவரும் தீவைத்து கொளுத்தியுள்ளனர். சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர்.

பலத்த காயமடைந்த அவரை மேற்சிகிச்சைக்காக சைஃபை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர். அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் குற்றவாளி இளைஞரின் தாயார் மற்றும் சகோதரிமீது வழக்குப்பதிவு செய்து தாயாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் தலைமறைவாகியுள்ள இளைஞர் மற்றும் அவரது சகோதரியை தீவிரமாக தேடிவருகின்றனர். சிறுமியின் சிகிச்சைக்கு வேண்டிய உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக காவல்துறை எஸ்.பி தெரிவித்துள்ளார்.