இந்தியா

13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது

ஜா. ஜாக்சன் சிங்

உத்தரபிரதேசத்தில் ஏற்கனவே கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 13 வயது சிறுமியை மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்த காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் லலித்பூர் நகரைச் சேர்ந்த 13 வயது சிறுமியை கடந்த வாரம் ஒரு கும்பல் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது. இந்த விஷயம் தெரியவந்ததும் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமியின் பெற்றோர், லலித்பூர் காவல் நிலையத்துக்கு சென்று புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து, அதற்கு அடுத்த நாளன்று சிறுமியின் பெற்றோருக்கு லலித்பூர் காவல் ஆய்வாளர் திலக்தாரி சரோஜ் போன் செய்துள்ளார்.

அப்போது அவர் சிறுமியின் வாக்குமூலத்தை பெற அவரை நேரில் அழைத்து வருமாறு கூறியுள்ளார். இதன்பேரில், உறவினர் ஒருவருடன் சிறுமி காவல் நிலையத்துக்கு சில தினங்களுக்கு முன்பு சென்றுள்ளார். அப்போது அவரை தனி அறைக்கு அழைத்து சென்ற ஆய்வாளர் திலக்தாரி, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது.

இதுகுறித்து அந்த சிறுமியின் உறவினர்கள் மாவட்ட எஸ்.பியிடம் புகார் அளித்தனர். மேலும், ஊடகங்களுக்கும் பேட்டிக் கொடுத்தனர். இதனால் இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு சமாஜ்வாதி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தையும், எதிர்ப்பையும் தெரிவித்தன. இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்ட காவல் ஆய்வாளர் திலக்தாரி சரோஜை போலீஸார் இன்று கைது செய்தனர். இதுதொடர்பாக டிஐஜி தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு 24 மணிநேரத்தில் அறிக்கை அளிக்கப்படும் என்றும், அறிக்கையின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் ஆய்வாளர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் உ.பி. காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.